ADDED : டிச 04, 2025 01:14 PM

சண்டிகர்: தன்னை விட அழகாக இருப்பதாக நினைத்து 4 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்த கொடூரப் பெண்ணை ஹரியானா போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது; நல்தா மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது 6 வயது சிறுமி ஒருவர் மாயமாகி போனார். உறவினர்கள் தேடி பார்த்த போது, அந்த வீட்டின் முதல் மாடியில் இருந்த தண்ணீர் டிரம்மில் தலைகீழாக மிதந்தபடி சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் உறவினரான பூனம்,32, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 2023ம் ஆண்டு தன்னுடைய சொந்த மகன் மற்றும் ஒரு சிறுமியையும் கொன்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் உறவுக்கார சிறுமியையும் கொலை செய்துள்ளார். கொலை செய்த 3 சிறுமிகளும், தன்னுடைய மகனும் பார்ப்பதற்கு அழகாக இருந்ததாகவும், அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனால், தன்னை விட அழகானவர்களாகி விடுவார்கள் என்ற பொறாமையில் இந்தக் கொலைகளை செய்ததாக ஒப்புக் கொண்டார். கல்வி அறிவு இல்லாத பூனம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருக்கிறார். முந்தைய கொலை வழக்கு பதிவாகியுள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினர்.

