ஏ.டி.எம்., வங்கியில் அடுத்தடுத்த கொள்ளையால் தலைவலி!: பாதுகாப்பை அதிகரிக்கும்படி டி.ஜி.பி., உத்தரவு
ஏ.டி.எம்., வங்கியில் அடுத்தடுத்த கொள்ளையால் தலைவலி!: பாதுகாப்பை அதிகரிக்கும்படி டி.ஜி.பி., உத்தரவு
ADDED : ஜன 19, 2025 07:09 AM
பெங்களூரு: அடுத்தடுத்த நாட்களில் ஏ.டி.எம்., வங்கியில் கொள்ளை நடந்தது, போலீஸ் துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களை தீவிரமாக கருதிய டி.ஜி.பி., அலோக் மோகன், வங்கிகள், ஏ.டி.எம்.,களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் சமீப நாட்களாக, அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடப்பதால், மக்கள் கிலி அடைந்துள்ளனர். இதற்கு முன்பு இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் நடந்தன. ஆனால் இப்போது பட்டப்பகலிலேயே கொலை, கொள்ளைகள் நடப்பது, போலீஸ் துறைக்கு சவால் விடுவது போல் உள்ளது.
அதிர்வலைகள்
பீதரில் மூன்று நாட்களுக்கு முன்பு, எஸ்.பி.ஐ., வங்கி எதிரே உள்ள ஏ.டி.எம்.,முக்கு பணம் நிரப்ப வந்த ஏஜென்சி வாகன ஊழியரை, மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது.
மொத்தம் 93 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பியது. பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால், மாநிலம் முழுதும் கடும் அதிர்வலைகள் ஏற்பட்டன
இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, விஜயபுராவில் சந்தோஷ் என்பவரின் வீட்டுக்குள். அதிகாலை புகுந்த மர்மகும்பல், குடும்பத்தினரை கத்தியால் தாக்கி, கொள்ளையடித்து தப்பினர்.
கொள்ளையர்களில் ஒருவர் சிக்கினார். மற்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, தட்சிணகன்னடா, உல்லாள் கூட்டுறவு வங்கியில் நேற்று முன்தினம் காரில் வந்த முகமூடி கும்பல் 12 கோடி ரொக்கம், தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவமும் பட்டப்பகலில் நடந்தது.
பீதரில் நடந்த கொள்ளையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தர பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர் உட்பட, சில மாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று தேடி வருகின்றனர்.
குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஹரிசேகரன், பீதரில் முகாமிட்டுள்ளார். சிறப்பு குழுவினருக்கு வழி காட்டுகிறார். அதேபோன்று கூட்டுறவு வங்கிக் கொள்ளையில் தொடர்பு கொண்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.
மாநிலத்தில் ஒரு பக்கம் கொலை, பாலியல் பலாத்காரங்கள், மற்றொரு பக்கம் கொள்ளைகள் அதிகரிப்பதால், மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
கேமராக்கள்
இதை தீவிரமாக கருதிய மாநில டி.ஜி.பி., அலோக் மோகன், அனைத்து மாவட்டங்களிலும் 'ஹை அலெர்ட்' அறிவித்துள்ளார். அனைத்து நகரின் போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளார்.
குறிப்பாக அதிகமாக பணம் புழங்கும் கூட்டுறவு வங்கிகள், வங்கிகள், ஏ.டி.எம்.,களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது.
நிதி நிறுவனங்கள், வங்கிகள், ஏ.டி.எம்.,களில் கட்டாயமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஆயுதம் ஏந்திய காவலாளிகளை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன.
ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்ப வரும் ஏஜென்சி வாகனங்களில், கட்டாயமாக ஆயுதம் ஏந்திய செக்யூரிட்டி கார்டுகள் இருப்பது கட்டாயம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தால் கண்காணிக்கும்படி வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, நிதி நிறுவனங்கள், வங்கிகளின் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தும்படி டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
உஷார்
பீதர், மங்களூரு கொள்ளை சம்பவங்களைத் தொடர்ந்து, பெங்களூரு போலீசார் உஷாராகிஉள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, “வங்கிகள், ஏ.டி.எம்.,கள் அருகில், ஹொய்சளா போலீசார் ரோந்து பணியை பலப்படுத்த வேண்டும். வங்கிகள், ஏ.டி.எம்.,களில் இரவு, பகல் ஷிப்டுகளில் பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். ரோந்து போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என உத்தரவிட்டுள்ளார்.