பா.ஜ., மாநில தலைவர்களை தேர்வு செய்வதில்... தலைவலி!
பா.ஜ., மாநில தலைவர்களை தேர்வு செய்வதில்... தலைவலி!
ADDED : மார் 02, 2025 12:46 AM

பா.ஜ.,வில் மாநில தலைவர்களை தேர்வு செய்வதில் உட்கட்சி குழப்பம் நீடித்து வருவதால், கட்சியின் தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், பா.ஜ., தலைமைக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
அனைத்து சிக்கல்களையும் தீர்த்து, மார்ச் 15ம் தேதிக்குள் புதிய தலைவர் யார் என்பதை அறிவிக்க, ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பா.ஜ.,வின் தேசிய தலைவராக, நட்டா 2019ல் பொறுப்பேற்றார்.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றதால், இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு, தலைவர் பதவியில் அவரே நீடித்தார்.
இதன்படி கடந்த ஜூன் மாதமே இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
மேலும், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது, அதில் சுகாதாரத் துறை அமைச்சராக நட்டா பொறுப்பேற்றார்.
போட்டா போட்டி
பா.ஜ., விதிகளின்படி, ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நட்டா சுகாதாரத் துறை அமைச்சரான போதே, கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
ஆனாலும், கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் என்ற, இரு பெரும் பொறுப்புகளில் தற்போது வரை நீடித்து வருகிறார்.
இவருக்கான பணிச்சுமை அதிகம் என்பதால், எப்போது புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி பல மாதங்களாகவே கட்சிக்குள் இருந்து வந்தது.
இதற்கிடையில் கட்சியின் அமைப்பு தேர்தல்கள் நடந்து முடிந்து, முறைப்படி புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்ற நிலை உருவானது.
ஆனால், திட்டமிட்டபடி பல்வேறு மாநிலங்களில் அமைப்புத் தேர்தலை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும், ஆளுங்கட்சியாக, பெரும் செல்வாக்குடன், நாடு முழுதும் இருக்கும் கட்சி என்பதால், பதவிகளைப் பிடிப்பதற்கு நிர்வாகிகள் மத்தியில் போட்டா போட்டி இருந்து வருகிறது.
விதிகளின்படி தேர்தல் நடத்தி, அதன் வாயிலாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றாலும், சண்டை சச்சரவுகளை தவிர்க்கும் நோக்கில், பெரும்பாலும் ஒருமனதாகவே மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை, 12 மாநிலங்களில் மட்டுமே தலைவர்கள் தேர்வாகியுள்ளனர்.
நம்பிக்கை
குறைந்தபட்சம், 50 சதவீத மாநிலங்களில் தலைவர் தேர்வு முடிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான், பா.ஜ., தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது விதி.
ஆனால், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளை, டில்லி தலைமையால் சமாளிக்க முடியவில்லை.
இதுதவிர, சட்டசபை தேர்தலை எதிர்நோக்கும் மேற்கு வங்கம்,தமிழகம், அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய தலைவர்களை கொண்டுவரலாமா அல்லது தற்போதுள்ளவர்களையே நீடிக்கச் செய்யலாமா என்பதை முடிவு செய்ய முடியாமல், கட்சியின் தலைமை திணறுகிறது.
எதுவாக இருப்பினும், இந்த பிரச்னைகளை விரைவில் சரிசெய்து, குறைந்தது மேலும் ஆறு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை தேர்வு செய்து முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் பா.ஜ., தலைமை உள்ளது.
வரும் நாட்களில் இந்த தேர்வுகள் மளமளவென முடிந்து, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் புதிய தேசிய தலைவர் யார் என்பதை இறுதிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கையில், தீவிர நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஹிந்து காலண்டர்படி, வரும் மார்ச் 15ம் தேதிக்கு மேல், சுபகாரியம் செய்வதற்கு உகந்த காலம் இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே, அதற்கு முன்பாக, புதிய தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- நமது டில்லி நிருபர் -

