மாரடைப்பு அச்சம்; இதய பரிசோதனைக்காக மைசூரு மருத்துவமனையில் குவிந்த மக்கள் கூட்டம்!
மாரடைப்பு அச்சம்; இதய பரிசோதனைக்காக மைசூரு மருத்துவமனையில் குவிந்த மக்கள் கூட்டம்!
ADDED : ஜூலை 09, 2025 06:30 PM

மைசூரு: கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் இளைஞர்கள் உள்பட பலர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இதய பரிசோதனை செய்வதற்காக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பேர் மைசூரு மருத்துவமனையில் குவிந்தனர்.
ஹாசன் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக மாரடைப்புக்கு பலியாவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதுவரையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்று கூட ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாம்ராஜ்நகரில் அரசுப் பள்ளியில் பயின்று வந்த 4ம் வகுப்பு மாணவன் ஒருவன், மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்துள்ளான்.
ஹாசன் மாவட்டத்தில் நிகழும் தொடரும் மாரடைப்பு மரணங்களால், கர்நாடகா மக்கள் பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.
அந்த வகையில், மைசூருவில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையில், இதய பிரச்னைகள் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்ய நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் குவிந்துள்ளனர். வரிசையில் காத்திருந்து, இதய பரிசோதனையை செய்து வருகின்றனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'வெளியாகும் செய்திகளை பார்த்து மக்கள் பீதியடைந்துள்ளனர். எங்களின் மருத்துவமனையில் சோதனை செய்து கொள்வதால் இதய பிரச்னைகள் தீர்ந்துவிடாது. உடல் நலத்தை பராமரிக்க வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதுபோன்ற கூட்டமாக பரிசோதனை செய்ய குவிவதால், ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய மருத்துவம் அளிக்க முடியாமல் போய் விடும்,' எனக் கூறினார்.
மாரடைப்பு மரண பீதியால், மருத்துவமனையில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.