லக்கி நம்பர் இறுதி நாள்.., புது வாழ்வு கனவு கண்ணீரானது ! ரணமாக்கும் தகவல்கள்
லக்கி நம்பர் இறுதி நாள்.., புது வாழ்வு கனவு கண்ணீரானது ! ரணமாக்கும் தகவல்கள்
UPDATED : ஜூன் 13, 2025 03:24 PM
ADDED : ஜூன் 13, 2025 02:42 PM

ராஜ்கோட்: குஜராத்தில் நடந்த விமான விபத்தில் சிக்கி பலியானவர்கள் தொடர்பான பலரது நிலை குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
நேற்று (ஜூன்-12)ல் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் சில நிமிடங்கிளில் பூமியை நோக்கி விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 240 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் லண்டன் நோக்கி சென்ற ஒவ்வொரு பயணிகளும் ஒவ்வொரு கனவுகளுடன், பல கடமைகளை சுமந்து சென்றனர். ஆனால் துரதிருஷ்டமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
முன்னாள் முதல்வரின் லக்கி டேட்
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பா.ஜ., வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். லண்டனில் இருக்கும் மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர் எப்போதும் தனது விலை உயர்ந்த கார்களுக்கு 1206 என்ற நம்பரையே வாங்குவார். இந்த நம்பரை சொன்னாலே இது ரூபானி வாகனம் என தெரிந்து விடும். அந்த அளவுக்கு பிரபலம். இவரது இறுதிநாளும் இந்த நம்பரிலேயே முடிந்தது. அதாவது (ஜூன்12) 12.06.2025. இதுவும் அவரது சொந்த ஊரான ராஜ்காட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
புதிய வாழ்க்கையை நோக்கி புறப்பட்ட பெண் டாக்டர்
இது போல் ஒரு டாக்டர் குடும்பத்தினர் பலியான சோகம். ராஜஸ்தானின் பன்ஸ்வாராவை சேர்ந்த பெண் மருத்துவர் கோமி வியாஸ் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் 'நான் என் வேலையை விட்டு விலகுகிறேன், நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார். லண்டன் பயணத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் டாக்டரும் அவரது கணவர் பிரதீக் , 3 குழந்தைகள் விமான விபத்தில் சாம்பலானார்கள். புதிய வாழ்க்கை என்று கூறியது அவரது வாழ்வின் இறுதி நாளாக மாறிப்போனது. கனவுகள் நிறைந்த ஒரு முழு குடும்பத்தையும் ஒரே நொடியில் அழித்துவிட்டது.
விசா மறுப்பால் உயிர் போனது
கனடாவில் படிப்புக்காக சென்றவர் 20 வயது இளைஞரான ருத்ரா படேல். இவருக்கு அங்கு விசா நீட்டிப்பு மறுக்கப்பட்டதால் இவர் லண்டன் சென்று படிப்பை தொடர திட்டமிட்டு புறப்பட்டார். ஆனால் அவரது கல்விக்கனவு நிறைவேறும் முன்னதாக இந்த கொடூரமான விபத்தில் இறந்தார்.
முதல் பயண கனவு
ராஜஸ்தானைச் சேர்ந்தவரும், தற்போது குஜராத்தின் ஹிம்மத்நகரில் பணியாற்றி வரும் ஒரு குடும்பத்தின் மகள் பாயல். பாயலின் தந்தை சுரேஷ்பாய் காதிக், இவர் ஒரு ரிக்ஷா வண்டி ஓட்டுபவர். இவர் தனது மகளுக்கு கஷ்டத்திலும் பல லட்சம் செலவில் கல்வி கற்க வைத்தார். இவரும் தனது ஏழ்மை நிலையை அறிந்து கடுமையாக உழைத்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனத்தின் சார்பாக அவரை லண்டனுக்கு அனுப்ப இந்நிறுவனம் முடிவு செய்தது. இவர் முதல் முறையாக விமானத்தில் பயணம் என்ற கனவுடன் ஏறினார். ஆனால் சில நிமிடங்களில் விபத்தில் நிலை குலைந்தார்.
புது மண தம்பதிகள்
ராஜஸ்தானின் பனஸ்கந்தா மாவட்டத்தின் தானேரா தாலுகாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் கமலேஷ்பாய், தபுபென் இவர்கள் லண்டனுக்கு சென்று, திரும்பும் கனவில் இருவரும் உயிரிழந்தனர்.