ஆந்திராவிலும் வெளுத்து வாங்கும் கன மழை: மக்கள் பாதிப்பு
ஆந்திராவிலும் வெளுத்து வாங்கும் கன மழை: மக்கள் பாதிப்பு
ADDED : அக் 16, 2024 02:51 AM

அமராவதி: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திராவின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், ஆந்திரா மற்றும் புதுச்சேரியின் ஏனாம் பகுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக ஆந்திராவில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழை பெய்தது.
நெல்லுார் மாவட்டத்தின் கவாலி பகுதியில், 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்ததாக பபாட்லாவின் அட்டாங்கியில் - 14; நெல்லுாரின் கந்துகூரில் - 12; ஏனாமில் -9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
நெல்லுார் மாவட்டத்தின் ஆத்மகூரில், 8 செ.மீ., மழை உட்பட ஆந்திராவின் கடலோர பகுதியில் நேற்று கனமழை பெய்தது.
ராயலசீமா பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர்., கடப்பா மாவட்டத்தின் கூடூரில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது.
அத்துடன், சூலுார் பேட்டையில், 7 செ.மீ.,யும், திருப்பதி கூடூரில், 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடற்கரையோரங்களில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பலத்த மழை காரணமாக ஆந்திராவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.