பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல்: தினமும் நொந்து நூலாகும் மக்கள்!
பெங்களூருவில் கடும் போக்குவரத்து நெரிசல்: தினமும் நொந்து நூலாகும் மக்கள்!
UPDATED : அக் 24, 2024 03:34 PM
ADDED : அக் 24, 2024 03:31 PM

பெங்களூரு: கனமழை காரணமாக பெங்களூருவில் சில நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகராக கர்நாடக தலைநகர் பெங்களூரு உருவெடுத்து உள்ளது. நகரில் தினமும் 80 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. இதனால்,எந்த சாலையைப் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், காலையில் வேலைக்கு செல்பவர்கள், மாலையில் வீடு திரும்புபவர்கள் நெரிசலில் சிக்கி நொந்து நூலாகின்றனர். சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பெங்களூருவில், மழைக்காலத்தில் சொல்ல வேண்டியதில்லை.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக நகரில் உள்ள சாலைகளில் பெரும் பள்ளங்கள் விழுந்துள்ளன. பள்ளங்களில் வாகனங்களை இறக்கினால் பழுதடைந்து விடும் என்று கருதி வாகன ஓட்டிகள் அதனை தவிர்த்து செல்ல முயல்கின்றனர். இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழை காரணமாக சாலைகளும் குளங்கள் போல மாறி உள்ளதால், வாகனங்கள் தத்தளித்தபடி செல்கின்றன. ஆட்டோ, கார், பைக் சைலன்சர்களில் வெள்ள நீர் புகுவதால் சாலையின் நடுவே நின்றுவிடுகின்றன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுபோதாது என்ற போக்குவரத்து சிக்னல்களில் நெரிசல் ஏற்பட்டால் நிலைமை இன்னும் மோசம். சிக்னல்களில் சிவப்புவிளக்கு மாறி, பச்சைவிளக்கு எரிந்தாலும், சிக்னல் கோடு முன் நிற்கும் வாகன ஓட்டிகள், வாகனங்களை வேகமாக எடுப்பது இல்லை.சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசலால், ஐந்து நிமிடங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல, அரைமணி நேரம் ஆகும். இப்போது மணிக்கணக்கில் ஆகிறது.
நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது.
நெரிசலில் காத்திருந்த வாகன ஓட்டிகள் ஒரு கட்டத்தில் வெறுப்பு அடைந்தனர். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சிக்கே சென்ற பலர், தங்களது வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, வீடு மற்றும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்தே சென்றனர்.போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் வெளியிட்டு வருகின்றனர்.