சிரித்துக்கொண்டே, கையசைத்தபடி கோர்ட்டில் ஆஜரான ஹேமந்த் சோரன்
சிரித்துக்கொண்டே, கையசைத்தபடி கோர்ட்டில் ஆஜரான ஹேமந்த் சோரன்
UPDATED : பிப் 01, 2024 04:14 PM
ADDED : பிப் 01, 2024 02:30 AM

ராஞ்சி : நில அபகரிப்பு வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அபகரித்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு சம்மன்களை புறக்கணித்த முதல்வர் சோரன், எட்டாவது சம்மனுக்கு பதிலளித்தார்.
கடந்த 20ம் தேதி ராஞ்சியில் உள்ள வீட்டில் அவரிடம் ஏழு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். பின் ஜனவரி 29 அல்லது 30ல் மீண்டும் ஆஜராகும்படி தெரிவித்தனர்.
திடீரென தலைமறைவான நிலையில் நேற்று இரவு கவர்னர் மாளிகை வந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது காவலில் வைத்துள்ளனர்.
இவர் மீதான வழக்கில் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் சோரனை இன்று காலை காலை ஆஜர்படுத்தினர். இதற்காக வாகனத்தில் இருந்து இறங்கிய சோரன், நீதிமன்றத்திற்குள் செல்லும் வரை புன்னகைத்தபடியும், தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார்.
இதனிடையே, தனது கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.