அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசில் ஹேமந்த் சோரன் புகார்
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசில் ஹேமந்த் சோரன் புகார்
ADDED : ஜன 31, 2024 04:36 PM

ராஞ்சி: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
ஜார்க்கண்டில் போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, முதல்வர் ஹேமந்த் சோரன் அபகரித்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் மாநில சமூக நலத்துறை இயக்குனரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சாவி ரஞ்சன் உட்பட 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறையினர், அவருக்கு ஏழு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
புதுடில்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில், அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது சோரன் வீட்டில் இல்லை. மொத்தம், 13 மணி நேரம் அவரது வீட்டில் இருந்த அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.எம்.டபிள்யூ.,- எஸ்.யு.வி., ரக கார் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கடந்த 24 மணி நேரமாக எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் தலைமறைவாக இருந்த சோரன், நேற்று ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பினார்.
இந்நிலையில், இன்று ராஞ்சியில் உள்ள வீட்டில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, அவரது வீட்டின் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதனிடையே, ராஞ்சியில் உள்ள துருவா போலீஸ் ஸ்டேசனில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி ஹேமந்த் சோரன் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.