ADDED : நவ 24, 2024 05:54 PM

புதுடில்லி: ஹேமந்த் சோரன் தலைமையில் புதிய அமைச்சரவை ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.28ல் பதவியேற்கிறது.
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில், இந்த கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றியடைந்தது.
ஜே.எம்.எம்., கட்சியின் சட்டமன்ற தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஏற்கனவே இருந்த அமைச்சரவையை கலைத்துவிட்டு, புதிய அமைச்சரவை அமைக்க கூட்டணி ஆதரவு கடிதத்தை, முதல்வர் ஹேமந்த் சோரன், இன்று மாநில கவர்னர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14வது முதல்வராகிறார் ஹேமந்த் சோரன். அவர் கூறுகையில், ''புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தை, கவர்னரிடம் அளித்துள்ளேன். புதிய அமைச்சரவை நவ.28ல் பதவி ஏற்கிறது,'' என்றார்.