சானிட்டரி நாப்கின் இயந்திரம் அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
சானிட்டரி நாப்கின் இயந்திரம் அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
ADDED : ஆக 14, 2025 02:47 AM
புதுடில்லி:புதுடில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகில் கோயல், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு:
டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் சில இடங்களில் மட்டுமே பெண்களுக்கான கழிவறையில் சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் உள்ளன.
பல நிலையங்களில் இந்த வசதி இல்லை. தினமும் லட்சக்கணக்கான பெண்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால், ரயில் நிலையங்களில் மாதவிடாய் சுகாதார வசதி இல்லாததால், உடல் நலம் மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களின் பெண்கள் கழிவறைகளிலும் சானிட்டரி நாப்கின் தானியங்கி இயந்திரங்கள் அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் கோரிக்கை குறித்து டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், டில்லி அரசு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மற்றும் டில்லி மகளிர் ஆணையம் ஆகியவை பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

