தேஜஸ்வி சூர்யா மீதான வழக்கு ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
தேஜஸ்வி சூர்யா மீதான வழக்கு ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
ADDED : டிச 13, 2024 05:31 AM

பெங்களூரு: ஹாவேரியை சேர்ந்த ருத்ரப்பா என்ற விவசாயி, நவ., 7ல் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், 'வக்பு வாரியத்தின் நடவடிக்கையால் தற்கொலை செய்து கொண்டார்' என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மாவட்ட எஸ்.பி., 'விவசாயி ருத்ரப்பா, தனது விவசாயம் நஷ்டம் அடைந்ததால், 2022 நவ., 6ல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்; வக்பு வாரியம் விவகாரத்தால் அல்ல' என்று விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து, 'எக்ஸ்' வலைதள பதிவை தேஜஸ்வி சூர்யா அகற்றி விட்டார்.
இதற்கிடையில், 'எம்.பி., தேஜஸ்வி சூர்யாவின் பதிவு, இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் உள்ளது' என கூறி, அவர் மீது ஹாவேரி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, தேஜஸ்வி சூர்யா உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
நீதிபதி நாகபிரசன்னா நேற்று அளித்த தீர்ப்பில், 'கடனோ அல்லது வேறு எந்த பிரச்னையாக இருந்தாலும், விவசாயியின் மகன் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீங்கள் அனைவரும் இதில் அரசியல் செய்கிறீர்கள். தேஜஸ்வி சூர்யா மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என்றார்.