அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதி மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதி மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
ADDED : பிப் 12, 2025 10:23 PM
இந்தியாகேட்:அரசியல் கட்சிகளின் இலவச வாக்குறுதி அறிவிப்புகளை எதிர்த்த மனுவை விசாரிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுதாரரை உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுரை வழங்கியது.
அண்மையில் டில்லி சட்டசபைத் தேர்தல் நடந்தது. முன்னதாக அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ஏராளமான இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசின. இத்தகைய அறிவிப்புகளை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.என். திங்ரா, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மனுவில், அரசியல் கட்சிகளின் இலவசங்கள் குறித்த அறிவிப்பை மனுதாரர் எதிர்த்தார். மேலும் முழு தேர்தல் செயல்முறையும் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்டத்தை மீறுவதாகவும் கூறினார்.
அத்துடன் இலவசப் பொருட்களை வினியோகிப்பதற்காக வாக்காளர்களின் தரவுகளை அரசியல் கட்சி சேகரிப்பதையும் அவர் தன் மனுவில் எதிர்த்திருந்தார்.
ஓட்டுப்பதிவுக்கு முன்பே இந்த வழக்கு தொடரப்பட்டபோதிலும் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியதாவது:
வாக்காளர்களுக்கு இலவசங்கள் வினியோகிப்பது மற்றும் அது ஊழல் நடைமுறைகளுக்குச் சமமானதா என்ற இரண்டு அம்சங்கள் குறித்து விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு ஓய்வுபெற்ற நீதிபதியான மனுதாரர் அணுகலாம்.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. ஒரு பிரச்னையில் இரண்டு இணையான வழக்குகள் இருக்க முடியாது. அதன்படி, இந்த மனுவை நாங்கள் ஏற்க விரும்பவில்லை.
இவ்வாறு அமர்வு கூறியது.
இதையடுத்து மனுதாரரின் வழக்கறிஞர், மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை நீதிபதிகள் அனுமதித்தனர்.