ADDED : நவ 09, 2024 11:59 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஷாலிமார் நகருக்கு, வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இயக்கப்பட்டது.
ஏராளமான பயணியருடன் சென்ற இந்த ரயில், கோல்கட்டாவுக்கு 40 கி.மீ., தொலைவில் உள்ள நல்பூர் அருகே சென்றபோது, ரயிலின் சில பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாயின.
அப்போது பயணியரின் அலறல் சத்தம் கேட்டு, உடனே ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள், மீட்புக்குழுவினரின் உதவியுடன் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளில் சிக்கிய நபர்களை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஓம்பிரகாஷ் சரண் கூறுகையில், “விபத்தில் இரண்டு 'ஏசி' பெட்டிகள், பார்சல் வேன் உள்ளிட்டவை தடம் புரண்டன. இதில், பயணியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
''விபத்தின் காரணமாக, அந்த ரயிலில் பயணித்தவர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.