ADDED : ஜன 02, 2024 11:25 PM
ஷிம்லா:ழிலதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, டி.ஜி.பி., சஞ்சய்குண்டு இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஹிமாச்சல் டி.ஜி.பி.,யாக இருந்த சஞ்சய்குண்டு மீது, தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் புகார் கொடுத்தார். அதில், டி.ஜி.பி.,யால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம், கடந்த 26ம் தேதி பிறப்பித்த உத்தரவில், டி.ஜி.பி.,யை இடமாற்றம் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டுஇருந்தது.
மத்திய அரசின் பணிக்கு அனுப்பப்பட்டிருந்த சஞ்சய் குண்டு, முந்தைய முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ., ஆட்சியின்போது, 2020ல், மீண்டும் மாநில பணிக்கு திருப்பி அழைக்கப்பட்டார். முதல்வரின் முதன்மைச் செயலராக இருந்த அவர், டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சஞ்சய் குண்டு, ஆயுஷ் துறையின் முதன்மை செயலராக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். டி.ஜி.பி., பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில், தன்னை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை எதிர்த்து, சஞ்சய் குண்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்கிறது.