அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை! இமாச்சல பிரதேசத்தில் அதிரடி
அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை! இமாச்சல பிரதேசத்தில் அதிரடி
ADDED : நவ 27, 2024 09:13 AM

சிம்லா: அரசு பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இமாச்சல பிரதேச அரசு அறிவித்துள்ளது.
இமாச்சல பிரதேச போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் அம்மாநில துணை முதல்வரும், போக்குவரத்து அமைச்சருமான முகேஷ் அக்னிஹோத்ரி முக்கிய ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;
மாநிலம் முழுவதும் 1,000 பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் இயக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அவற்றில் 327 எலக்ட்ரிக் பஸ்களும் அடங்கும். மேலும் 250 மினி பஸ்கள், 100 மினி டெம்போ பஸ்களை இயக்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
போதை ஒழிப்பு மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டமைக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் பஸ்களில் குட்கா, மதுபான விளம்பரங்கள் நீக்கப்படும். விவசாயிகள் நலன் கருதி, பஸ்களில் கொண்டு வரப்படும் பால், காய்கறிகள் ஆகியவற்றுக்கு கட்டணம் விதிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அரசு பஸ்கள் மூலம் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கூடுதலாக 14 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. தினமும் 5 லட்சம் பயணிகள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் முக்கிய தேவைகளுக்காக, வருவாய் குறைவாக இருக்கும் வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.