வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவர் கைது: ஷேக் ஹசீனா கண்டனம்
வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவர் கைது: ஷேக் ஹசீனா கண்டனம்
UPDATED : நவ 28, 2024 10:08 PM
ADDED : நவ 28, 2024 10:03 PM

டாக்கா: வங்கதேசத்தில் ஹிந்து மதத்தலைவர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி.
கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது. அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக, டில்லியில் தங்கி உள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது: ஹிந்து மதத்தை சேர்ந்த தலைவரை போலீசார் தவறாக கைது செய்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிட்டகாங் நகரில் ஹிந்துக் கோயில் இடிக்கப்பட்டு உள்ளது. மசூதிகள், தேவாலயங்கள் அஹமதியா சமுதாயத்தினரின் வீடுகள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்தவை கொள்ளையடிக்கப்பட்டு தீவைக்கப்படுகின்றன.
மத சுதந்திரம் பாதுகாக்கப்படுவதுடன், அனைத்து சமுதாயமக்களின் வாழ்க்கையையும், வளர்ச்சியையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஷேக் ஹசீனா கூறினார்.