கோவிலை இடித்து கல்லறை கட்டியதாக ஹிந்துக்கள் போராட்டம்
கோவிலை இடித்து கல்லறை கட்டியதாக ஹிந்துக்கள் போராட்டம்
ADDED : ஆக 12, 2025 03:10 AM
கான்பூர்: உத்தர பிரதேசத்தில், ஹிந்து கோவில் இருந்ததாக கூறி, முஸ்லிம்கள் கல்லறையை முற்றுகையிட்டு ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, பதேபூரில் உள்ள சதுர் பகுதியில் முஸ்லிம் சமூ கத்தின் கல்லறை உள்ளது.
அரசு ஆவணங்களின்படி, இது தேசிய சொத்தாக கருதப்படுகிறது. இங்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவன் கோவில் இருந்ததாக ஹிந்து அமைப்பினர் கூறி வருகின்றனர்.
மேலும் தாமரை மலர், திரிசூலம் போன்றவை இருப்பதால், இது ஹிந்துக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடம் என்றும், காலப்போக்கில் அது அபகரிக்கப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, கல்லறை அமைந்துள்ள இடத்தில் ஹிந்து அமைப்பினர் நேற்று பிரார்த்தனை செய்ய முடிவு செய்தனர்.
அதேசமயம், இங்கு கிருஷ்ணன் கோவில் இருந்ததாகவும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதை சுத்தப்படுத்தப் போவதாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், காவிக்கொடிகளை கையில் ஏந்தியபடி ஹிந்து அமைப்பினர் கல்லறை வளாகத்துக்குள் திடீரென நேற்று நுழைந்து அதை சேதப்படுத்த முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியும் கேட்காமல், ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் உள்ளே நுழைந்தனர். அவர்களை வெளியேற்ற முடியாமல் போலீசார் திணறினர்.
பல மணி நேரப் போராட்டத்துக்கு பின், ஹிந்து அமைப்பினர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.