சூசகம்!மக்கள் ஆதரவுடன் மீண்டும் பா.ஜ., ஆட்சியே அமையும் முதல்வர் சித்தராமையா முன்னிலையில் மோடி உற்சாகம்
சூசகம்!மக்கள் ஆதரவுடன் மீண்டும் பா.ஜ., ஆட்சியே அமையும் முதல்வர் சித்தராமையா முன்னிலையில் மோடி உற்சாகம்
ADDED : ஜன 20, 2024 06:14 AM

பெங்களூரு: பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “நிலையான ஆட்சி,” என்று கூறியதும், அரங்கில் இருந்தவர்கள் கை தட்டி ஆராவாரம் செய்து, 'மோடி, மோடி' என்று கோஷமிட்டனர். அப்போது, மேடையில் இருந்த கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை பார்த்து, “மக்கள் ஆதரவுடன் மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சியே அமையும்,” என்று தனக்கே உரிய பாணியில் உற்சாகத்துடன் கூறினார்.
பெங்களூரு, பி.மாரேனஹள்ளியில் உள்ள விண்வெளி பூங்காவில், போயிங் இண்டியா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதைத் துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம், நேற்று மதியம் பெங்களூரு வந்தார்.
கெம்பேகவுடா விமான நிலையத்தில், பிரதமர் மோடியை துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
உற்சாக வரவேற்பு
அங்கிருந்து கார் மூலம், நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பிரதமர் வந்தார். வழிநெடுகிலும் பா.ஜ., தொண்டர்கள், பொதுமக்கள் நின்று, 'மோடி, மோடி' என்று உற்சாகமாக கையசைத்து வரவேற்பு அளித்தனர்.
விழா நடந்த இடத்துக்கு வந்த பிரதமரை, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.
பின், போயிங் இண்டியா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மையத்தையும்; விண்வெளி துறையில் பெண்கள் மேம்பாடு குறித்த போயிங் சுகன்யா திட்டத்தையும், மோடி துவக்கி வைத்தார்.
பெண் பைலட்கள்
பின்னர் அவர் பேசியதாவது:
நாட்டில், 2014ல் 75 விமான நிலையங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது, 150 விமான நிலையங்கள் செயல்படுகின்றன. நாங்கள் புதிய விமான நிலையங்களை அமைக்கவில்லை. ஆனால், ஏற்கனவே இருந்ததை மேம்படுத்தி, செயல்பட வைத்தோம்.
அனைத்து துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். சந்திரயான் 3 உட்பட பல்வேறு முன்னணி திட்டங்களில் பெண்கள் பங்களித்துள்ளனர். இந்தியாவில் 15 சதவீதம் பெண் பைலட்கள் இருக்கின்றனர்.
விமான தொழிலில், மேக் இன் இந்தியா திட்டத்தினால், உலகிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்தாண்டு துமகூரில் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை துவக்கி வைத்தேன்.
இம்முறை உலகளாவிய விமான தொழில்நுட்ப மையத்தை துவக்கி வைத்துள்ளேன். கர்நாடகா விமான தொழிலில் சிறந்து விளங்குகிறது. விமான தொழிலுக்கு மாநில அரசுகள், வரியை குறைக்க வேண்டும்.
நிலையான ஆட்சி
விமானங்களில் உள்நாட்டு மக்கள் அதிகமாக பயணம் செய்யும் நாடுகளில், இந்தியா 3வது இடத்தில் உள்ளது. வருங்காலத்தில் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும். உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியதால் தான் சாத்தியமாயிற்று. இது, இந்த நிலையான ஆட்சியால் தான் முடிந்தது. புதிய கொள்கைகளையும் உருவாக்க முடிந்தது.
மத்திய அரசின் ஆண்டு ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். பலர் நடுத்தர வர்க்கத்துக்கு உயர்ந்துஉள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
'நிலையான ஆட்சியால் தான் முடிந்தது' என்று பிரதமர் சொன்னபோது, அரங்கில் இருந்தவர்கள், 'மோடி, மோடி' என்று கோஷம் எழுப்பியும், விசில் அடித்தும், கை தட்டியும் ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரம் சில நொடிகள் வரை நீடித்தது.
கரகோஷம்
உற்சாகமடைந்த மோடி, தன் பேச்சை நிறுத்திவிட்டு, மேடையில் இருந்த முதல்வர் சித்தராமையாவை பார்த்து, “முதல்வரே மீண்டும், மீண்டும் இப்படி நடக்கும்,” என, 'அடுத்து மீண்டும் பா.ஜ., ஆட்சி தான்' என்பதை சூசகமாக கூறினார்.
அப்போது, அரங்கில் மீண்டும் கரகோஷம் விண்ணை தொட்டது. முதல்வர், கவர்னர் உட்பட மேடையில் இருந்தவர்கள் சிரித்தபடி, 'அடுத்து என்ன பேசுவார்?' என்று பிரதமரை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரிடம் சென்று மோடி சிரித்துப் பேசினார். பின், பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு சென்றார்.
பிரதமர் வருகையை ஒட்டி, அவர் பயணித்த வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.