எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு 7 ஆக உயர்வு; முன்னெச்சரிக்கையாக இருக்க மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு 7 ஆக உயர்வு; முன்னெச்சரிக்கையாக இருக்க மக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
UPDATED : ஜன 07, 2025 12:09 PM
ADDED : ஜன 07, 2025 11:04 AM

புதுடில்லி: எச்.எம்.பி.வி., தொற்று பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், எச்.எம்.பி.வி., எனப்படும், ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் பரவல் சமீபத்தில் அதிகரித்தது. நுரையீரலை தாக்கி சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் இந்த வகை தொற்று, குழந்தைகள் மற்றும் முதியோரை எளிதில் தாக்குகிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம், கர்நாடகாவின் பெங்களூரு, குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களில் மொத்தம் ஐந்து குழந்தைகளுக்கு, எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
தற்போது, நாக்பூரில் 7 வயது மற்றும் 13 வயது குழந்தைகளுக்கு எச்.எம்.பி., தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு 7 ஆக அதிகரித்துள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* சோப் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
* அபரிதமான விதத்தில் எச்.எம்.பி.வி., தொற்று அதிகரிக்கவில்லை.
* 2001 முதல் உலகம் முழுவதும் உள்ள தொற்று என்பதால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை.
* தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பெங்களூரு, ஆமதாபாத் மற்றும் சென்னையில் எச்.எம்.பி.வி., தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை.
* இருமல், காய்ச்சல்,மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்புக்கு அறிகுறிகள்ஆகும். சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் பிற வைரஸ்கள் போன்றது தான். தொற்று பரவலை நினைத்து, மக்கள் கவலை அடைய வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.