ADDED : பிப் 17, 2024 10:58 PM

இன்றைய நவீன காலத்தில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் உழைக்கின்றனர். ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்றிருந்த பல்வேறு தடைகளை, இப்போது பெண்கள் தகர்த்து சாதிக்கின்றனர். ஐ.டி., மருத்துவம், போலீஸ், ஹோட்டல் தொழில் என, பெண்கள் கால் வைக்காத இடமே இல்லை.
படித்த பெண்கள் மட்டுமின்றி, பள்ளிக்கூடத்தை மிதிக்காத பெண்களும் கூட, தங்கள் திறமையை வைத்து, வாழ்க்கையில் சாதனை செய்கின்றனர். தங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றனர். பிள்ளைகளுக்கு கல்வி கொடுத்து, நல் வாழ்க்கை ஏற்படுத்தி தருகின்றனர்.
நகரங்களில் உள்ள பெண்கள் மட்டுமே, சாதனை செய்ய முடியும் என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. ஆனால் தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை, கிராமத்து பெண்கள் நிரூபித்துள்ளனர். இதற்கு உத்தரகன்னடாவின், பழங்குடியின ஸித்தி சமுதாயத்தின் பெண்களை கூறலாம்.
உத்தரகன்னடா, எல்லாபுராவின், லிங்கதபைலு கிராமத்தில் ஸித்தி சமுதாய பெண்கள் சேர்ந்து, சுற்றுலா பயணியருக்காக 'டமாமி ஹோம்ஸ்டே' என்ற பெயரில், ஹோம்ஸ்டே கட்டியுள்ளனர். இதை இவர்களே நிர்வகிக்கின்றனர். இது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஹோம்ஸ்டேவுக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, மறக்க முடியாத அனுபவம் கிடைக்கிறது.
மற்ற இடங்களில் உள்ள ஹோம்ஸ்டேக்களை விட, 'டமாமி ஹோம்ஸ்டே' முற்றிலும் மாறுபட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணியரை, சித்தி சமுதாய பெண்கள் தங்களின் சம்பிரதாயப்படி ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். உணவும் கூட அவர்களின் சம்பிரதாயப்படியே இருக்கும்.
ஸித்தி சமுதாய பெண்கள், சம்பிரதா உடைகளை அணிந்து, நடனமாடி, பாடி சுற்றுலா பயணியரை மகிழ்விக்கின்றனர். இயல்பான, மாறுபட்ட அனுபவத்தை உணரவே, பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
எல்லாபுராவில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் 'டமாமி ஹோம்ஸ்டே' உள்ளது. பஸ் வசதியும் உள்ளது. சில நாட்கள் இயற்கை சூழலில் தங்கி, மனதுக்கு இனிமையான விருந்தோம்பலை அனுபவிக்க விரும்புவோர், இங்கு வரலாம்.