குதிரை ரூ.15 கோடி; எருமை ரூ.23 கோடி புஷ்கர் கால்நடை சந்தையில் ஆச்சரியம்
குதிரை ரூ.15 கோடி; எருமை ரூ.23 கோடி புஷ்கர் கால்நடை சந்தையில் ஆச்சரியம்
ADDED : அக் 29, 2025 02:44 AM

புஷ்கர்: ராஜஸ்தானில், ஆண்டுதோறும் நடக்கும் புஷ்கர் கால்நடை சந்தையில், இந்த ஆண்டு, 23 கோடி ரூபாய் மதிப்பிலான, 'அன்மோல்' எனும் எருமையுடன், 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஷபாஸ்' எனும் குதிரை உள்ளிட்ட கால்நடைகள் பங்கேற்றுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில், இந்த ஆண்டுக்கான கால்நடை சந்தை நாளை துவங்கி, நவம்பர் 5 வரை நடக்கிறது.
இந்தாண்டு கால்நடை சந்தையில், 4,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 3,000 குதிரைகள் மற்றும், 1,300 ஒட்டகங்கள் அடக்கம்.
இதில், நட்சத்திர அந்தஸ்து பெற்ற குதிரையாக, 'ஷபாஸ்' உள்ளது. இதை சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் கேரி கில் என்பவர் வளர்க்கிறார்.
மார் வாரி வகையைச் சேர்ந்த, 3 வயது குதிரையான இதற்கு, 15 கோடி ரூபாய் அவர் விலை சொல்கிறார். ஏற்கனவே இந்த குதிரைக்கு, 9 கோடி ரூபாய் வரை தர ஆட்கள் முன் வந்ததாகவும் கூறினார்.
இந்த கண்காட்சியில் கவனம் ஈர்த்த மற்றொரு விலங்கு, 'அன்மோல்' எனும் ஆண் எருமை. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கில் என்பவர் இதை வளர்க்கிறார். முக்கிய கால்நடை கண்காட்சிகள் அனைத்திலும் இந்த எருமை பங்கேற்றுள்ளது.
'அன்மோல்' எருமைக்கு தினசரி, பால், நெய், பாதாம், முந்திரி ஆகியவை உணவாக தரப்படுவதாக அதன் உரிமையாளர் கூறினார். இதன் விந்தணுவை விற்று மாதம் தோறும் வருவாய் பார்க்கின்றனர். இதற்கு, 23 கோடி ரூபாய் விலை வைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி, மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினில் இருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ரானா' எனும் எருமை, பஞ்சாபை சேர்ந்த, 11 கோடி ரூபாய் மதிப்பிலான, 'பாதல்' எனும் குதிரை உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
கால்நடை சந்தையின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, 2,000 போலீசார் புஷ்கரில் குவிக்கப்பட்டு உள்ளனர். கால்நடைகளுக்கான நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாநில கால்நடைத்துறை கண்காணிக்கிறது.

