பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறியது எப்படி: பார்லி விவாதத்தில் காங்கிரஸ் கேள்வி
பஹல்காமில் பயங்கரவாதிகள் அத்துமீறியது எப்படி: பார்லி விவாதத்தில் காங்கிரஸ் கேள்வி
ADDED : ஜூலை 28, 2025 03:58 PM

புதுடில்லி: ''பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிறைய விளக்கம் கொடுத்தார். ஆனால் பயங்கரவாதிகள், பஹல்காமில் அத்துமீறி எப்படி நுழைந்தார்கள் என்பதை அவர் சொல்லவில்லை,'' என்று பார்லி விவாதத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவாதத்தை துவக்கி வைத்து பேசினார். அப்போது பாகிஸ்தானில் 9 முக்கிய நிலைகளில் 100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியா, பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்து விட்ட நிலையில், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதை அடுத்து போர் முடிவுக்கு வந்தது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
தொடர்ந்து காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிறைய விளக்கம் அளித்தார். ஆனால் பயங்கரவாதிகள் பஹல்காமை எவ்வாறு அடைந்தார்கள் என்பதைச் சொல்லவில்லை.
இது தகவல் போரின் யுகம். பாதுகாப்பில் தோல்வி மூலம் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா பின்னால் ஒளிந்து கொள்ள கூடாது. மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, தவறான தகவல்களைப் பரப்ப, சில சக்திகள் வேலை செய்கின்றன.
பஹல்காம் தாக்குதல் நடந்த நேரத்தில் தனது சவுதி அரேபியா பயணத்தை முடித்த பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிக்கு உடனடியாகச் செல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி, பீகாரில் அரசியல் தொடர்பாக உரையாற்றினார்.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் மட்டுமே சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார்.
இவ்வாறு கவுரவ் கோகாய் பேசினார்.

