முந்தியது வாட்ஸ்அப்; பிந்தியது டெலிகிராம்; காரணம் இது தான்!
முந்தியது வாட்ஸ்அப்; பிந்தியது டெலிகிராம்; காரணம் இது தான்!
ADDED : ஆக 28, 2024 09:55 AM

புதுடில்லி: டெலிகிராம் நிறுவனர் கைது செய்யப்பட்டு, அதன் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியிருக்கும் நிலையில், வாட்ஸ்அப் வெற்றிநடை போடுகிறது. சேனல் அறிமுகம் செய்தது, அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கியது உள்ளிட்ட காரணங்களால், டெலிகிராமை முந்தி வாட்ஸ்அப் செயலி மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
பணப்பரிமாற்ற மோசடி, போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் குற்றஞ்சாட்டியது. அதன் அடிப்படையில் 'டெலிகிராம்' செயலி நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியான பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அரசும் டெலிகிராம் செயலியால் நடக்கும் சட்ட விரோத செயல்பாடுகள் தொடர்பாக விசாரித்து வருகிறது. இதன் மூலம், டெலிகிராம் செயலியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்நிலையில், சந்தை நுண்ணறிவு நிறுவனமான சென்சார் டவரின் வணிக நிறுவனம் வெளியிட்ட தரவுகள் விபரம் வருமாறு: டெலிகிராம் செயலியுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப் பன்மடங்கு முன்னே சென்று வெற்றிநடை போடுகிறது. ஆனால் டெலிகிராம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.
பதிவிறக்கம்
இந்தியாவில் 2024ம் ஆண்டு டெலிகிராம் செயலியை 6 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 2023ம் ஆண்டு 8.1 கோடி பேரும், 2022ம் ஆண்டு 9.1 கோடி பேரும், 2021ல் 10.8 கோடி பேரும் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பயன்படுத்துவோர் எவ்வளவு?
இருப்பினும், டெலிகிராமிற்கான பயனர்களின் அடிப்படையில் இந்தியா இன்னும் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இந்தியாவில் 11 கோடி பேரும், ரஷ்யாவில் 3.5 கோடி பேரும், இந்தோனேஷியாவில் 2.7 கோடி பேரும், அமெரிக்காவில் 2.6 கோடி பேரும், பிரேசிலில் 2.2 கோடி பேரும் டெலிகிராம் சேவையை பயன்படுத்திகின்றனர்.
பிளே ஸ்டோரில் இடம் என்ன?
டெலிகிராம் செயலி, ஆப்பிள் ஸ்டோரில் 3வது இடத்திலும், கூகுளின் பிளே ஸ்டோரில் 5வது இடத்திலும் உள்ளன.
அசுர வளர்ச்சி அடைந்த வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கையில் டெலிகிராமைப் பெரிய வித்தியாசத்தில் முந்தியுள்ளது. வாட்ஸ்அப் கடந்த ஓராண்டில் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டெலிகிராம் பயன்படுத்துவோர் 11 கோடி தான். ஆனால் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை 53 கோடி.
டெலிகிராமுக்கு ஆரம்பத்தில் இளைஞர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் சேனல்கள் உள்ளிட்ட புதுப்புது அப்டேட்கள் கொடுத்து அசைக்க முடியாத இடத்துக்கு முன்னேறி விட்டது.
வாட்ஸ்அப் சேவையை முறியடித்து டெலிகிராம் முன்னேறுவது கடினம் தான். பெரிய அளவிலான பைல்களை அனுப்புவதற்கு உபயோகப்படுவது தான் இந்தியாவில் சிலர் டெலிகிராம் சேவையை விரும்புவதற்கு காரணம். தொழில்முனைவோர் சந்தைப்படுத்துதலுக்காக பயன்படுத்துகின்றனர்.