ADDED : மார் 19, 2026 01:21 AM

அசாம் காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த பிரத்யுத் பர்டோலாய், பா.ஜ.,வில் இணைந்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அவர் விலகியது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு. இது, காங்.,கின் முதுகெலும்பை முறித்துள்ளது. சுயமரியாதையை விரும்பும் நபர்கள் யாரும் காங்.,கில் நீடிப்பதை விரும்பமாட்டார்கள்.
திலீப் சைகியா அசாம் மாநில பா.ஜ., தலைவர்
கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள்!
சட்டசபை தேர்தல் அறிவித்த பின்னும், கேரள பஸ்களில் ஆளும் அரசின் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இது, அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
வி.டி.சதீசன் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்.,
ராகுலுக்கு புரியவில்லையா?
நம்பகத்தன்மையற்ற வெளிநாட்டு அமைப்பு, இந்திய உளவு அமைப்பான 'ரா'விற்கு தடை விதிக்க வேண்டும் என கூறுகிறது. ஆனால், ரா அமைப்பில் பணியாற்றிய அதிகாரிகள் பலர், நம் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். வெறுப்புக் கடையின் உரிமையாளரான காங்., ராகுலுக்கு இது புரியவில்லையா?
கவுரவ் பாட்டியா, தேசிய செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,

