வரதட்சணை கேட்டு கொடுமை மனைவியை எரித்து கொன்ற கணவன்: உ.பி.,யில் பயங்கரம் சுட்டு பிடித்தது போலீஸ்
வரதட்சணை கேட்டு கொடுமை மனைவியை எரித்து கொன்ற கணவன்: உ.பி.,யில் பயங்கரம் சுட்டு பிடித்தது போலீஸ்
ADDED : ஆக 24, 2025 11:45 PM

நொய்டா: உத்தர பிரதேசத்தில் 36 லட்சம் ரூபாய் வரதட்சணை தராத மனைவியை, உயிரோடு கணவர் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய கணவரை, காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
சித்ரவதை உ.பி.,யின் நொய்டா மாவட்டத்தில் உள்ள சிர்ஷா என்ற பகுதியைச் சேர்ந்தவர் விபின். இவருக்கும், நிக்கி, 28, என்பவருக்கும் 2016ல் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு, 6 வயதில் மகன் உள்ளார்.
நிக்கியின் சகோதரி காஞ்சன் என்பவரும், விபின் சகோதரர் ரோஹித்தை தான் திருமணம் செய்துள்ளார். திருமணமானதில் இருந்தே தந்தையிடம் வரதட்சணை வாங்கி தரும்படி, நிக்கியை அவரது கணவர் விபினும், மாமியார் தயாவும் அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்தனர்.
இந் நிலையில், 36 லட்சம் ரூ பாய் வரதட்சணை கேட்டு, நிக்கியை விபினும், மாமியார் தயாவும் சமீபத்தில் சரமாரியாக அடித்து, உதைத்தனர். மேலும், மகன் மற்றும் சகோதரி காஞ்சன் கண் எதிரே, நிக்கி மீது மண்ணெண்ணெய் ஊற்றி விபின் தீ வைத்தார்.
எரிந்த நிலையில் நிக்கி, வீட்டின் நாலாபுறமும் ஓடினார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபினும், அவரது தாய் தயாவும் நிக்கியை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும், எரிந்த நிலையில் நிக்கி படிக்கட்டில் நடப்பது போன்ற வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலைமறைவு இது தொடர்பாக விபின், அவரது தாய் தயா, தந்தை சத்வீர், சகோதரர் ரோஹித் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விபினை மட்டும் போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றவர்கள், தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனி ப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், போலீஸ் காவலில் இருந்த விபின் நேற்று தப்பியோட முயற்சித்தார். அப்போது, அவரை காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். முன்னதாக, மனைவி நிக்கி தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு விபின் நாடகமாடினார்.
நிக்கியின் சகோதரி காஞ்சன் கூறுகையில், ''என்னையும், என் சகோதரி நிக்கியையும் அடித்து துன்புறுத்தினர். தந்தையிடம் இருந்து 36 லட்சம் ரூபாய் வாங்கி தரும்படி சித்ரவதை செய்தனர்.
''ஒருவருக்கு தான் வரதட்சணை வந்திருக்கிறது; மற்றொருவருக்கு எங்கே என கேட்டு அடித்தனர். நீ செத்து விடு, நாங்கள் வேறு திருமணம் செய்து கொள்கிறோம் என சொன்னார்கள். என் கண் எதிரே நிக்கியை தீ வைத்து எரித்தனர். அவரை காப்பாற்ற முயன்றேன்; முடியவில்லை,'' என்றார்.
அம்மாவின் உடலில் எதையோ ஊற்றினர்; பின், அவரை அடித்தனர். அதன்பின், லைட்டரால் அம்மாவின் உடலில் தீயை பற்ற வைத்தனர். உயிரிழந்த நிக்கியின் 6 வயது மகன்
சுட்டுக் கொல்லுங்க!
விபின் குடும்பத்தினர் கேட்ட அனைத்தையும் கொடுத்தே ன். ஸ்கார்பியோ கார், புல்லட் பைக்கும் வாங்கிக் கொடுத்தேன். இருந்தும், என் மகள் நிக்கியை அடித்து துன்புறுத்தியதோடு, கொலையும் செய்துள்ளனர். விபின் குடும்பத்தினரை சும்மா விடக்கூடாது. விபினை என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட வே ண்டும். பிகாரி சிங், நிக்கியின் தந்தை