ADDED : நவ 11, 2024 05:15 AM

ஷிவமொக்கா: உணவு பரிமாறாமல், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
ஷிவமொக்காவின் ஷிகாரிபுராவில் உள்ள அம்பிலிகோலா கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா, 28. இவர் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மனு.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த கணவர், மனைவியிடம் உணவு தருமாறு கேட்டுள்ளார். அப்போது கவுரம்மா, 'நான் போனில் பேசுவது தெரியவில்லை. உங்களுக்கு கை இருக்கிறது அல்லவா. நீங்களே எடுத்து கொள்ளுங்கள்' என கூறியுள்ளார்.
மீண்டும் உணவு பரிமாறுமாறு மனு கேட்ட போது, கோபமடைந்த கவுரம்மா, உணவு பரிமாற முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனு, மனைவி சரமாரியாக அடித்து, கழுத்தை துண்டால் நெரித்து கொலை செய்தார். பின், மனைவியின் தந்தைக்கு போன் செய்து, உங்கள் மகள் இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாமனார், சம்பவ இடத்துக்கு வந்து, போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த ஷிகாரிபுரா கிராம போலீசார், கணவர் மனுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.