மனைவியை கொன்று உடலை சூட்கேசில் வைத்து கணவர் ஓட்டம்
மனைவியை கொன்று உடலை சூட்கேசில் வைத்து கணவர் ஓட்டம்
ADDED : மார் 28, 2025 04:14 AM

தொட்டகம்மனஹள்ளி: மனைவியை கொன்று, உடலை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து, மாமியார் வீட்டுக்கு தகவல் கொடுத்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடுகின்றனர்.
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திரா, 35. இவரது மனைவி கவுரி அனில் சாம்பேகர், 31. இவர்கள் ஓராண்டுக்கு முன், பணி நிமித்தமாக பெங்களூரு வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
பெங்களூரு புறநகரின் தொட்டகம்மனஹள்ளியில் வசிக்கின்றனர். சமீப நாட்களாக இருவரும் வீட்டில் இருந்து பணி செய்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிக்கு இடையே, அவ்வப்போது சண்டை நடக்கும்.
அதே போன்று நேற்று முன் தினம் நள்ளிரவும், கடுமையாக வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கணவர் ராகேஷ் ராஜேந்திரா, கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்தார். பின் உடலை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில்நிரப்பினார்.
வெளியே கொண்டு சென்று, எங்காவது வீச நினைத்தார். அவரால் கொண்டு செல்ல முடியவில்லை. மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு, நடந்ததை கூறிவிட்டு தப்பியோடினார்.
பீதியடைந்த கவுரியின் பெற்றோர், மும்பை போலீசாருக்கு தகவல் கூறி உதவி கேட்டனர். அவர்களும் பெங்களூரு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் ஹுலிமாவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை போலீசார், ராகேஷின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்திய போது, சூட்கேசில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
டி.சி.பி., சாரா பாத்திமா, சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தப்பியோடிய ராகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.