ADDED : நவ 01, 2024 07:01 AM
மைசூரு: வரதட்சணைக்காக இளம்பெண்ணை கொலை செய்ததாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு, ஹுன்சூரின், குட்லுர் கிராமத்தில் வசிப்பவர் கிரண், 30. இவரது மனைவி நிர்மலா, 25. இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது, வரதட்சணையாக பணம், தங்க நகைகள் கொடுத்திருந்தும், மேலும் வரதட்சணை கொண்டு வரும்படி கணவர் வீட்டினர், நிர்மலாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி பெற்றோரிடமும், நிர்மலா கூறியுள்ளார். நேற்று முன் தினம் இரவு, நிர்மலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர்.
இதையறிந்து நேற்று காலை, அவரது குடும்பத்தினர் வந்து, கிரணின் குடும்பத்தினரை கண்டித்தனர். அப்போது இவர்களிடையே வாக்குவாதம் நடந்தது. நிர்மலா குடும்பத்தினர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
ஹுன்சூர் போலீசார் அங்கு வந்து விசாரித்த போது, நிர்மலாவை கொலை செய்தது தெரிந்தது. கிரணையும், அவரது தாயையும் போலீசார் கைது செய்தனர்.