மனைவியை விட்டு கணவர் ஓட்டம்; நியாயம் கேட்டு போலீசில் புகார்
மனைவியை விட்டு கணவர் ஓட்டம்; நியாயம் கேட்டு போலீசில் புகார்
ADDED : பிப் 03, 2025 05:04 AM
விஜயபுரா; குவைத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நபர், விஜயபுராவில் மனைவியை விட்டு விட்டு ஓடினார். மனைவி நியாயம் கேட்டு போராடுகிறார்.
விஜயபுராவை சேர்ந்தவர் ஆரிப், 28. ஆந்திராவின் சித்தாபுராவை சேர்ந்தவர் ஷாஹினா, 24. இவர்கள் இருவரும் குவைத்தில் பணி செய்கின்றனர். ஒரே இடத்தில் பணியாற்றியதால், இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. சேர்ந்து வாழ்ந்தனர். ஷாஹினா சம்பாதித்த பணத்தை, ஆரிப்பிடம் கொடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகலாம் என, கூறி விஜயபுராவின், தாளிகோட்டேவுக்கு ஷாஹினாவை, ஆரிப் அழைத்து வந்தார். ஆரிப் குடும்பத்தினர் முன்னிலையில், ஜனவரி 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை ஆரிப் குடும்பத்தினர் விருப்பம் இல்லை.
திருமணமான 20 நாட்களிலேயே தலாக் கொடுக்கும்படி, ஆரிப்பும், அவரது குடும்பத்தினரும் ஷாஹினாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். தாக்கி கொடுமைப்படுத்தினர்.
மனம் நொந்த ஷாஹினா, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், ஆரிபை வரவழைத்து புத்திமதி கூறினர். அவரும் ஒழுங்காக குடும்பம் நடத்துவதாக உறுதி அளித்து, மனைவியை அழைத்து வந்தார். சில நாட்கள் சரியாக நடந்து கொண்டார். அதன்பின் அவர் பழையபடி மாறினார்.
தனிக்குடித்தனம் நடத்தலாம் என, கூறி, விஜயபுராவின், புரனாபுராவில் வாடகை வீட்டுக்கு மனைவியை அழைத்து வந்தார். இங்கும் மனைவியுடன் தகராறு செய்தார்.
நேற்று முன் தினம், தன் உறவினருடன் வந்த ஆரிப், மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டினர். அவரிடம் இருந்த பணம், தங்க நகைகள், மொபைல் போன் உட்பட, அனைத்து ஆவணங்களையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.
கணவரை தேடி தரும்படி, விஜயபுரா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.