ADDED : மார் 19, 2025 09:14 PM

அத்திப்பள்ளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில், சப்பாத்தி கட்டையால் அடித்து காதல் மனைவியை கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.
பெங்களூரு ரூரல் அத்திப்பள்ளி அருகே ராச்சமனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் பாபு, 32. இவர், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மைசூரின் அனிதா, 29, மற்றொரு பெண் என இருவரை காதலித்தார். இருவரையும் ஒரே நாளில் திருமணம் செய்தார். இரண்டு மனைவியருக்கும் தலா இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அனிதாவின் நடத்தையில், பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து, உதைத்தார். இதனால் மனம் உடைந்த அனிதா, மூன்று மாதங்களுக்கு முன்பு பாபுவை பிரிந்து, சொந்த ஊரான மைசூரு சென்றார்.
இரு குடும்பத்தினரும் சமாதானம் பேசி கணவன் - மனைவியை கடந்த மாதம் சேர்த்து வைத்தனர். கடந்த 17ம் தேதி இரவும் மனைவி நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இரவு முழுவதும் சண்டையிட்டனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்த சப்பாத்தி கட்டையால், அனிதாவை, பாபு சரமாரியாக தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த, அனிதா பரிதாபமாக இறந்தார்.
அதிர்ச்சி அடைந்த பாபு, மனைவி உடல் அருகில் அமர்ந்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு அத்திப்பள்ளி போலீஸ் நிலையம் சென்று, சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.