நான் பொறுப்பேற்க முடியாது: சட்டசபையில் ஒமர் அறிவிப்பு
நான் பொறுப்பேற்க முடியாது: சட்டசபையில் ஒமர் அறிவிப்பு
ADDED : அக் 04, 2011 01:18 AM

ஸ்ரீநகர் : தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர், போலீஸ் காவலில் இறந்தது குறித்து விவாதிக்க, ஒத்தி வைப்புத் தீர்மானத்தை, எதிர்க்கட்சிகள் கோரியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால், காஷ்மீர் சட்டசபை, நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர் சையத் முகமது யூசுப்.
அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சட்டமேலவை உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக, இரண்டு பேரிடம் ஒரு கோடியே 18 லட்ச ரூபாய் வாங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இதற்கிடையே, கடந்த மாதம் 29ம் தேதி இரவு, இவர் போலீஸ் காவலில் இறந்தார்.
இந்த சம்பவம், சட்ட சபையில் நேற்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியது. யூசுப் மரணம் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சியினர் ஒத்தி வைப்பு தீர்மானத்தை வலியுறுத்தினர். ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து, மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கை அருகே வந்து கோஷம் போட்டனர்.
மூன்று முறை சபை ஒத்தி வைக்கப்பட்டும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலகும் படி கோரினர். இதனால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து, முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், ' கட்சித் தொண்டர் மரணத்துக்கு, நான் பொறுப்பேற்க முடியாது. இது குறித்து விசாரிக்க, நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நான் எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என்றார்.

