எனக்கு வேறு வழி தெரியல; மம்தா நிகழ்ச்சிகளை புறக்கணிப்பேன்; மேற்கு வங்க கவர்னர் அறிவிப்பு
எனக்கு வேறு வழி தெரியல; மம்தா நிகழ்ச்சிகளை புறக்கணிப்பேன்; மேற்கு வங்க கவர்னர் அறிவிப்பு
UPDATED : செப் 13, 2024 06:56 AM
ADDED : செப் 13, 2024 06:53 AM

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
போராட்டம்
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் மம்தா முதல்வர் பதவிலியிருந்து விலக வேண்டும் என 34 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தயார்
நேற்று டாக்டர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அவர், 2 மணிநேரம் காத்திருந்த நிலையில், டாக்டர்கள் வராததால் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து, மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாக்டர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினேன். தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலக தயார், எனக் கூறியிருந்தார்.
புறக்கணிப்பு
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:- முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்க மாட்டேன். மாநிலத்தில் கிராமங்கள், நகரங்கள் என எங்கு திரும்பினாலும் கலவரமாகவே இருக்கிறது. அரசியலமைப்பு விதிகளை நிலைகுலையச் செய்ததற்காக, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். கவர்னராக அரசியலமைப்பில் உள்ள அம்சங்களை பாதுகாப்பது எனது கடமையாகும்.
துணை நிற்பேன்
நீதிக்காக போராடும் பெண் டாக்டரின் குடும்பத்திற்கும், மேற்கு வங்க மக்களுக்கும் துணை நிற்பேன். மேற்கு வங்க அரசு தனது கடமையில் இருந்து தவறி விட்டது. கோல்கட்டா போலீஸ் கமிஷ்னர் மீது நடவடிக்கை எடுக்குமாறு எனது பரிந்துரையை மம்தா அரசு நிராகரித்து விட்டது. இந்த வழக்கில் போலீஸ் தலைமை அதிகாரியின் செயல்பாடுகள் சந்தேகம் அளிக்கிறது. அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், எனக் கூறினார்.