'என் வாழ்நாளில் சி.ஏ.ஏ.,வை அமல்படுத்த விட மாட்டேன்'
'என் வாழ்நாளில் சி.ஏ.ஏ.,வை அமல்படுத்த விட மாட்டேன்'
ADDED : ஜன 31, 2024 12:44 AM
ராய்கஞ்ச், ''நான் உயிருடன் இருக்கும் வரை, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விட மாட்டேன்,'' என, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, அகதிகளாக நம் நாட்டில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு பார்லி.,யில் நிறைவேறி சட்டமானது.
இந்நிலையில், இன்னும் ஏழு நாட்களுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உத்தர் தீனஜ்பூர் மாவட்டத்தின் ராய்கஞ்ச் பகுதியில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தின் வாயிலாக அரசியல் ஆதாயம் தேட, ஆளும் பா.ஜ., முயற்சிக்கிறது.
நான் உயிருடன் இருக்கும் வரை இந்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விட மாட்டேன்; பொது சிவில் சட்டத்தையும் அமல்படுத்த விட மாட்டேன்.
எல்லையில் வசிக்கும் மக்களுக்கு, பிரத்யேக அடையாள அட்டைகள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் வாயிலாக அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, அங்கு வசிக்கும் மக்களை இணைக்கும் திட்டமாக அமையக்கூடும். எனவே, எல்லையோர மக்கள், மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.