மனம் உடைந்து போக மாட்டேன் ம.ஜ.த.,வின் நிகில் திட்டவட்டம்
மனம் உடைந்து போக மாட்டேன் ம.ஜ.த.,வின் நிகில் திட்டவட்டம்
ADDED : நவ 23, 2024 10:58 PM
ராம்நகர்: ''சென்னப்பட்டணாவில் தோல்வியால் மனம் உடைந்து போக மாட்டேன்,'' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில், மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
87,000 ஓட்டுகள் அளித்த வாக்காளர்களுக்கு நன்றி. தேர்தலில் உழைத்த ம.ஜ.த., - பா.ஜ., தொண்டர்களுக்கு நன்றி. இனி வரும்காலத்தில் ராம்நகர் மாவட்ட மக்களின் குரலாக பணியாற்றுவேன்.
ஜனநாயக அமைப்பில் மக்களின் முடிவே இறுதியானது. வாக்குறுதிகள் தேர்தலுக்காக மட்டும் அளிக்கப்படவில்லை. மக்களுக்காகவே அளிக்கப்பட்டது. எனது தாத்தா தேவகவுடா, தந்தை குமாரசாமி ஆகியோர் ராம்நகர் மாவட்ட மக்களால் வளர்க்கப்பட்டவர்கள்.
நான் ராம்நகரில் பிறக்கவில்லை. இருப்பினும், எனக்கும், ராம்நகருக்கும் ஒரு உன்னதமான தொடர்பு உண்டு. எனது தந்தையுடன் இணைந்து, மாவட்டத்தில் உள்ள மக்களுக்காக பணியாற்றுவேன்.
தொகுதியில் அனைவரும் உண்மையாக உழைத்தனர், ஆனாலும், ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள், காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து போக மாட்டேன்.
கிராமப்புற மக்கள் என்னை கைவிடவில்லை. ம.ஜ.த., பல ஏற்ற, இறக்கங்களை கண்டுள்ளது. எனவே இடைத்தேர்தல் முடிவால், நாங்கள் மனம் தளரமாட்டோம்.
தொண்டர்களே எங்கள் கட்சியின் முதுகெலும்பு. தேவகவுடா ம.ஜ.த.,வை வளர்த்தவர். வெறும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற போதும், தொண்டர்கள் எங்களுடன் இருந்தனர்.
எங்கே தவறு செய்தோம் என்பதை அறிந்து, அதை சரி செய்வோம். கட்சியை வேரில் இருந்து பலப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

