ADDED : மார் 19, 2024 06:35 AM

மைசூரு: ''மன்னராக இல்லாமல், அரண்மனையில் இருந்து வெளியே வந்து சாமானியன் போன்று இருப்பேன். சாமானியர்களுக்கு சேவை செய்வேன்,'' என மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீர் தெரிவித்தார்.
மைசூரு பா.ஜ., வேட்பாளராக, மன்னர் யதுவீர் களமிறக்கப்பட்டுள்ளார். அறிவிப்பு வெளியாகி ஐந்து நாட்களுக்கு பின், தற்போதைய எம்.பி., பிரதாப் சிம்ஹா, யதுவீரை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின், நகரின் தனியார் ஹோட்டலில், யதுவீர் கூறியதாவது:
மக்கள் என்னை தேடி, அரண்மனைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அரண்மனைக்கு வெளியே அலுவலகத்தை திறப்பேன்.
பொது மக்களுக்கு எப்போதும் கிடைப்பேன். மைசூரில் இல்லாத நாட்கள் தவிர, தினமும் அலுவலகத்துக்கு வருவேன்.
மன்னராக இல்லாமல், அரண்மனையில் இருந்து வெளியே வந்து சாமானியன் போன்று இருப்பேன். சாமானியர்களுக்கு சேவை செய்வேன். சொத்து அனைத்தும், என் தாய் பெயரில் தான் உள்ளது.
பெங்களூரு அரண்மனை மைதானத்தை பயன்படுத்தி, சாலை விரிவாக்கம் செய்வது குறித்த வழக்கை, எங்கள் சட்ட வல்லுனர்கள் எதிர்கொள்வர். இதற்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின், பிரதாப் சிம்ஹா பேசுகையில், ''யதுவீரின் ஏஜன்டாக இருந்து அவரை பெற்றி பெற செய்வேன். நாட்டில் மீண்டும் பா.ஜ., வெற்றி பெற்று, நரேந்திர மோடி, பிரதமர் ஆவது உறுதி,'' என்றார். பின், உள்ளூர் பா.ஜ., தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, பிரசாரத்துக்கு புறப்பட்டனர்.

