தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பேன்: சொல்கிறார் ராகுல்
தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பேன்: சொல்கிறார் ராகுல்
UPDATED : பிப் 12, 2026 09:39 AM
ADDED : பிப் 12, 2026 09:38 AM

புதுடில்லி: ''போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பேன்'' என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்களை எதிர்த்து இன்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று, நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த நான்கு தொழிலாளர் சட்டங்களையும் தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். தங்கள் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்றும் அஞ்சுகின்றனர். வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இது கிராமங்களின் வளர்ச்சியை பாதிக்கும். அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் போராட்டங்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

