அரசியல் சாசனத்தின் ஈடில்லா முக்கியத்துவம் ஐ.ஏ.எஸ்., தம்பதியின் 5 வயது மகளின் 'தேசப்பற்று'
அரசியல் சாசனத்தின் ஈடில்லா முக்கியத்துவம் ஐ.ஏ.எஸ்., தம்பதியின் 5 வயது மகளின் 'தேசப்பற்று'
ADDED : பிப் 17, 2024 11:04 PM

கர்நாடக சுற்றுலா துறை இயக்குனரும், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவருமாக இருப்பவர் ராம்பிரசாத் மனோகர். மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், தமிழகத்தின் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவி திவ்யாபிரபு, ஹுப்பள்ளி - தார்வாட் கலெக்டராக பொறுப்பு வகிக்கிறார். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இத்தம்பதிக்கு, அகிலேஷ் ராம் கார்த்திக் என்ற 10 வயது மகனும், தயா ராம் நாக நீலா என்ற ஐந்து வயது மகளும் உள்ளனர்.
நாட்டுப்பற்று
தங்களை போலவே, பிள்ளைகளுக்கும் இப்போதே நாட்டுப்பற்று சொல்லிக் கொடுக்கின்றனர். இந்த வகையில், கர்நாடக அரசு சார்பில், அரசியல் அமைப்புக்கு சமீப காலமாக முன்னுரிமை அளித்து வருகின்றனர். இதற்கு அரசு தரப்பில் பல்வேறு முறைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், யு.கே.ஜி., படிக்கின்ற மகளுக்கு, அரசியல் அமைப்பு முகப்பு உரையை, பெற்றோர் சொல்லிக் கொடுத்தனர். அதை கவனமாக கேட்டு, பிழையின்றி அப்படியே அரசியல் அமைப்பு முகப்பு உரையை அந்த சிறுமி பேசி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். வீடியோவும் வெளியிட்டு உள்ளார்.
அதில் பேசியிருப்பதாவது:
இந்தியாவின் மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாய நலம் நாடும், சமய சார்பற்ற, சம உரிமை குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவு செய்து, அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூக நிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்க செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும், நாட்டின் ஒருமையையும், முழுமையையும் காக்கும் வண்ணம், அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும், நம் அரசியல் சாசனத்தை உருவாக்கும் அவையில், 1949 நவம்பர் 26ம் நாளில் ஏற்றபட்டதை ஏற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் முழங்கி உள்ளார்.
குவிந்த பாராட்டுகள்
இந்திய அரசியல் அமைப்பு முகப்புரையை வாசிக்க பெரியோரே திணறும்போது, ஐந்து வயது சிறுமியின் விழிப்புணர்வு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ, முகநுால், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம் போன்ற சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடியோ பார்த்து பாராட்டி வருகின்றனர்.
அதுவும் கன்னட மொழியில் நல்ல உச்சரிப்புடன் அரசியல் அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது, கர்நாடக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுஉள்ளது.