வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் முறைகேடு இருந்தால்... ரத்து செய்வோம் ! தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் முறைகேடு இருந்தால்... ரத்து செய்வோம் ! தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
ADDED : செப் 16, 2025 07:28 AM

'பீஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செல்லத்தக்கதா என்பது குறித்து அக்., 7ல் நடக்கும் இறுதி விசாரணையின் போது உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, உறுதியளித்த உச்ச நீதிமன்றம், 'தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில், சட்டத்திற்கு விரோதமாக சிறிய விஷயம் கண்டறியப்பட்டாலும், ஒட்டுமொத்த திருத்தப் பணியையும் முழுமையாக ரத்து செய்து விடுவோம்' என, எச்சரித்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. விரைவில் இம்மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
இதையொட்டி, ஒரு மாதத்திற்கு மேலாக பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டது.
அதில், உயிரிழந்தோர், வேறு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்தோர், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தோர் அடையாளம் காணப்பட்டு, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையால், பீஹாரில் வாக்காளர்கள் உரிமை பறிக்கப்படுவதாக கூறி, காங்., ஆர்.ஜே.டி., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அதே போல், ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தன.
இவ்வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் , நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க உத்தரவிட்டது.
மேலும், 12வது ஆவணமாக ஆதார் அடையாள அட்டையையும் தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலா பாக்சி அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இறுதி பட்டியல் அப்போது ஏ.டி.ஆர்., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் முன்வைத்த வாதம்:
பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதா என்பதை உச்ச நீதிமன்றம் ஆராய வேண்டும்.
இந்தச் சூழலில், மற்ற மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தொடர தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
பீஹாரில் நடந்த பணியில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை மற்ற மாநிலங்களுக்கும் தொடர அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ''நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் தொடரப் போகிறது. எனவே, உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தேர்தல் கமிஷன் அரசியல் சாசன வரம்புக்குள் செயல்படும் என கருதுகிறோம். இறுதி வாக்காளர் பட்டியல் அக்., 1ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறது.
அதனை ஆய்வு செய்வது பெரிய விஷயமல்ல. அதில் சட்டவிரோதமாக ஏதேனும் நடந்திருப்பது தெரியவந்தால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து விடுவோம்.
எனவே, தற்போது துண்டு, துண்டாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. தேர்தல் கமிஷன் எந்தவொரு கருத்துருவை முன்வைத்தாலும், பீஹார் திருத்தப் பணிக்கான எங்களது தீர்ப்பு நிச்சயம் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தடை விதிக்க முடியாது பீஹார் விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் தான் இருக்கும்.
மற்ற மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தால், அதன் மீதும் கண்டிப்பாக விசாரணை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
எனவே, பீஹாரை போல, நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்வதற்கு தற்போதைக்கு தடை விதிக்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை அக்., 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
--டில்லி சிறப்பு நிருபர்-