இது தொடர்ந்தால் மெஜாரிட்டி, மைனாரிட்டி ஆக வேண்டியது தான்: சர்ச்சையை ஆரம்பித்து வைத்த ஐகோர்ட்
இது தொடர்ந்தால் மெஜாரிட்டி, மைனாரிட்டி ஆக வேண்டியது தான்: சர்ச்சையை ஆரம்பித்து வைத்த ஐகோர்ட்
ADDED : ஜூலை 02, 2024 12:40 PM

அலகாபாத்: ‛‛ மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்'' எனக்கூறியுள்ள அலகாபாத் ஐகோர்ட், இது தொடர்ந்தால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறி விடுவர்'' எனக்கூறி உள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கைது
உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ராம்காலி பிரஜாபதி என்பவர் போலீசில் அளித்த புகாரில், ‛‛ எனது சகோதரர் ராம்பால் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவரை கைலாஷ் என்பவர் டில்லி அழைத்து சென்றார். சகோதரர் வீடு திரும்பவில்லை. கைலாஷிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் தரவில்லை. எங்கள் கிராமத்தை சேர்ந்த பலரை டில்லி அழைத்துச் சென்று கிறிஸ்தவ மதத்திற்கு கைலாஷ் மாற்றி உள்ளார் '' எனக்கூறி இருந்தார். இதனையடுத்து, ஆள்கடத்தல் மற்றும் உ.பி., மாநில மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைலாஷ் கைது செய்யப்பட்டார்.
பணம் வாங்கி
கைலாஷ் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதக்கூட்டங்களில் பங்கேற்கும் ஏராளமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுகின்றனர். இதற்காக கைலாஷ் பணம் வாங்கி வருகிறார் என்றார்.
உரிமையில்லை
இதனையடுத்து நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தனது உத்தரவில் கூறியதாவது: அரசியல் அமைப்பின் 25வது சட்டப்பிரிவின்படி, ஒரு மதத்தை பின்பற்றவும், அதனை பரப்பவும் உரிமை உள்ளது. ஆனால், ஒரு மத நம்பிக்கையில் இருந்து மற்றொரு மத நம்பிக்கைக்கு மாற்ற உரிமை வழங்கப்படவில்லை. ‛ புரோபோகேசன்' என்ற வார்த்தைக்கு ஊக்குவிக்கலாம் என அர்த்தம் கூறலாம். ஆனால், ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாற்றலாம் என அர்த்தம் இல்லை. ராம்பால் வீடு திரும்பவில்லை. பலர் மதமாற்றத்திற்காக அழைத்து செல்லப்படுகின்றனர். இதனை தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள், சிறுபான்மையினராக மாறி விடுவர். மதமாற்றம் நடப்பதற்கு காரணமாக அமையும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி கூறினார்.