குற்றச்சாட்டில் உறுதியாக இல்லையெனில் மக்களிடம்... மன்னிப்பு கேளுங்கள்! ராகுலின் ஓட்டு திருட்டு புகாருக்கு தேர்தல் கமிஷன் காட்டம்
குற்றச்சாட்டில் உறுதியாக இல்லையெனில் மக்களிடம்... மன்னிப்பு கேளுங்கள்! ராகுலின் ஓட்டு திருட்டு புகாருக்கு தேர்தல் கமிஷன் காட்டம்
UPDATED : ஆக 09, 2025 10:08 AM
ADDED : ஆக 09, 2025 05:13 AM

பெங்களூரு: 'தேர்தல் கமிஷனுக்கு எதிரான உங்களது குற்றச்சாட்டுகள் உண்மை என நம்பினால், சத்திய பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லை எனில், நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு தேர்தல் கமிஷன் காட்டமாக பதில் கொடுத்துள்ளது.
இதற்கு, 'நான், பார்லிமென்டில் சத்திய பிரமாணம் செய்திருக்கிறேன்' என, ராகுல் பதிலளித்துள்ளார். கடந்த, 2024 லோக்சபா தேர்தலில் முறைகேடு செய்து, ஓட்டுகளை திருடி, பா.ஜ., ஆட்சிக்கு வந்ததாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த மோசடிக்கு தேர்தல் கமிஷன் துணை போவதாகவும் அவர் புகார் கூறினார்.
டில்லியில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த ராகுல், கர்நாடகாவின் பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டசபை தொகுதியில், 1 லட்சம் போலி வாக்காளர்கள் ஓட்டுகளை பதிவு செய்ததாக சில புள்ளி விபரங்களுடன் குற்றஞ்சாட்டினார். இதை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:
தேர்தல் கமிஷனுக்கு எதிரான தன் குற்றச்சாட்டுகள் உண்மை என நம்பினால், சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுவதில் காங்., - எம்.பி., ராகுலுக்கு எந்த பிரச்னையும் இருக்கக் கூடாது. அப்படி கையெழுத்திட மறுத்தால், தன் குற்றச்சாட்டுகளை அவர் நம்பவில்லை என அர்த்தம்.
ராகுலுக்கு இரண்டே வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடுவது. மற்றொன்று, தேர்தல் கமிஷனுக்கு எதிராக தான் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் எனக்கூறி, நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்பது.
மேலும், பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாகவும் ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். செப்., 1 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளோம். ராகுல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. வழக்கம்போல காலக்கெடு முடிந்த பின் தெரிவிப்பார் என நினைக்கிறோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
த இதற்கிடையே, முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவின் பெங்களூரில், 'எங்கள் ஓ ட்டு, எங்கள் உரிமை' என்ற பெயரில், அக்கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் பங்கேற்றனர்.
பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
குற்றச்சாட்டுகள் தொடர்பாக சத்திய பிரமாணத்தில் கையெழுத்திடும்படி தேர்தல் கமிஷன் என்னிடம் கேட்கிறது. நான், பார்லிமென்டில் சத்திய பிரமாணம் செய்திருக்கிறேன். இதைவிட வேறு என்ன வேண்டும்?
நான் கூறிய விபரங்களின் அடிப்படையில் நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவர் என்ற பீதியால், இணையதளத்தை தேர்தல் கமிஷன் முடக்கி உள்ளது. கடந்த தேர்தலில் அரசியல் சாசனத்துக்கு எதிராக மோடி நடந்து கொண்டார். அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் அமைப்புகளை ஒழிக்கும் வேலையை செய்து வருகிறார்.
பிரதமர் மோடி, வெறும் 25 சீட்களில் வென்று பிரதமரானார். அந்த 25 தொகுதிகளில், வெறும் 35,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து நான் மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சியினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள முறைகேடுகளை மூடி மறைத்ததன் மூலம், பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவியுள்ளது. டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தர மறுப்பது ஏன்? வீடியோ சாட்சிகளை அழிப்பது ஏன்? எங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் மிரட்டுவது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.