குண்டு வெடிப்பு குற்றவாளி பற்றி துப்பு தந்தால்... ரூ.10 லட்சம்!; படத்தை வெளியிட்டு என்.ஐ.ஏ., அறிவிப்பு
குண்டு வெடிப்பு குற்றவாளி பற்றி துப்பு தந்தால்... ரூ.10 லட்சம்!; படத்தை வெளியிட்டு என்.ஐ.ஏ., அறிவிப்பு
ADDED : மார் 07, 2024 05:04 AM

பெங்களூரு : 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளியின் படத்தை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ., 'அவர் குறித்து துப்பு கொடுப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும்' என்று அறிவித்துள்ளது.
பெங்களூரு, மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ள பிரபல, 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி மதியம் திடீரென குண்டு வெடித்தது. 10 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த பகுதியில், தேசிய பாதுகாப்பு படை, உளவுத்துறை, போலீசார் ஆய்வு நடத்தினர். பெங்களூரு எச்.ஏ.எல்., காவல் நிலையத்தில், சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
* பயங்கரவாத தொடர்பு
சிரியா நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்., அமைப்புக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு பிரிவிடம், மாநில உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில், ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நேற்று முன்தினம் முதல், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையில், சம்பவம் நடந்த பகுதிகளை சுற்றி உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், ஒரு இடத்தில் மட்டும் குண்டு வைத்த நபர் முகக்கவசத்தை கழற்றியுள்ளார்.
* ரகசியமாக வைக்கப்படும்
அந்த படத்தை நேற்று என்.ஐ.ஏ., வெளியிட்டது. அந்த நபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., வெளியிட்ட அறிக்கை:
ராமேஸ்வரம் கபே உணவகத்தில், மார்ச் 1ம் தேதி நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள நபர் பற்றி தகவல் கொடுத்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும்.
தகவல் கொடுப்போரின் விபரம், ரகசியமாக வைக்கப்படும். 080 - 29510900, 89042 41100 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். info.blr.nia@gov.in என்ற இ - மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
மேலும், எஸ்.பி., - என்.ஐ.ஏ., 3வது மாடி, பி.எஸ்.என்.எல்., டெலிபோன் எக்சேஞ், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., 2வது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு - 560 008, என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* டி.ஜி.பி.,யுடன் ஆலோசனை
என்.ஐ.ஏ.,வுடன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து விசாரணை நடத்துகின்றனர். இதற்கிடையில், என்.ஐ.ஏ., - ஐ.ஜி., சந்தோஷ் ரஸ்தோகி தலைமையிலான உயர் அதிகாரிகள், மாநில டி.ஜி.பி.,யை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மாநில போலீசாரிடம் உள்ள அனைத்து தகவல்களையும், சாட்சியங்களையும் உரிய நேரத்தில் தங்களிடம் ஒப்படைக்கும்படி என்.ஐ.ஏ., அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அரசிடம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து, நேற்றுடன் ஆறு நாட்கள் முடிந்தும், இதுவரை குண்டு வைத்த நபர் எங்கு பதுங்கியுள்ளார் என்பதை கண்டுபிடிக்க முடியாதது கவலை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
* தீவிர கண்காணிப்பு
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பெங்களூரில் முன் எப்போதும் இல்லாத வகையில், பாதுகாப்பு பலப்படுத்துவதற்கு யோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உளவுத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர். மாநில போலீசாரும், முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட உள்ளனர்.
...பாக்ஸ்...
கையுறை அணிந்த மர்ம நபர்
ராமேஸ்வரம் கபே உணவகத்தில், குண்டு வெடிக்க செய்த நபர், கறுப்பு முகக் கவசம், தொப்பியும் அணிந்து வந்த சிசிடிவி காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது, கையுறை அணிந்து, உணவகத்துக்குள் நுழைந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. வெடிகுண்டு இருந்த பையை வைத்துவிட்டு செல்லும் போது, கையுறைகள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
-------
...புல் அவுட்...
ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு தொடர்பாக, குற்றவாளி குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது. விரைவில் கைது செய்யப்படுவார். சந்தேகத்தின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
- பரமேஸ்வர், அமைச்சர், உள்துறை
***

