'பஞ்சமசாலியை புறக்கணித்தால் நாற்காலி ஆட்டம் கண்டு விடும் '
'பஞ்சமசாலியை புறக்கணித்தால் நாற்காலி ஆட்டம் கண்டு விடும் '
ADDED : மார் 13, 2024 06:50 AM

கலபுரகி : ''பஞ்சமசாலி சமூகத்தை புறக்கணிப்பவர்கள், நாற்காலி ஆட்டம் கண்டுவிடும்,'' என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்சய சுவாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்க கோரி, கலபுரகி சரணபசவேஸ்வரா மைதானத்தில் நேற்று மாநாடு நடந்தது. பாகல்கோட் கூடலசங்கமாவில் உள்ள பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்சய சுவாமி பேசியதாவது:
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை, அரசு வெளியிட வேண்டும். இதற்காக நமது சமூக எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை நமது சமூகம் ஏற்றுக்கொள்ளாது.
பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு கேட்டு, காங்கிரஸ் அரசு வந்த பின்னரும், நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். எங்களை புறக்கணிப்பவர்கள் நாற்காலி ஆட்டம் கண்டுவிடும். எடியூரப்பாவை போன்று, சித்தராமையாவிடமும் இடஒதுக்கீடு கேட்டு அழுத்தம் கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

