UPDATED : பிப் 22, 2024 03:36 AM
ADDED : பிப் 22, 2024 01:10 AM

புதுடில்லி,சென்னை ஐ.ஐ.டி., கடந்த 2023ல், 300க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளதாக அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்புகளை பதிவு செய்து காப்புரிமை பெறுவதற்காக, ஐ.ஐ.டி.,யில் இயங்கும் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி உடன் கூடிய ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இங்கு பிரத்யேக சட்ட பிரிவும் உள்ளது.
இந்நிலையில் கடந்த 2023ல் சென்னை ஐ.ஐ.டி., பெற்ற காப்புரிமைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை காட்டிலும் இரு மடங்காக உயர்ந்து 300 என்ற சாதனை அளவை தொட்டு உள்ளது. இவை தவிர நடப்பு நிதியாண்டில் டிசம்பர் வரை 226 காப்புரிமைகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன.
ஐ.ஐ.டி., சென்னை துவங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம் 2,550 அறிவுசார் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் இந்தியாவில் 1,800 மற்றும் வெளிநாட்டில் 750 பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி கூறியதாவது:
ஒயர்லெஸ் நெட்வொர்க்குகள், ரோபாட்டிக்ஸ், நவீன இன்ஜின், துாய எரிசக்தி, நவீன சென்சார் கருவிகள், பையோமெடிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் அறிவுசார் சொத்துக்களை பதிவு செய்து வருகிறோம். கடந்த ஆண்டில் புதிய காப்புரிமைகள் எண்ணிக்கை 300ஐ எட்டியது பெருமைக்குரிய விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.