சட்டம் விரோத சுரங்க வழக்கு: லாலுவின் நெருங்கிய உதவியாளர் கைது
சட்டம் விரோத சுரங்க வழக்கு: லாலுவின் நெருங்கிய உதவியாளர் கைது
ADDED : மார் 10, 2024 11:48 AM

பாட்னா: சட்டம் விரோத சுரங்கம் நடத்தி வந்ததாக, தொடரப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவின் உதவியாளரான சுபாஷ் யாதவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் சுபாஷ் யாதவ் போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். சுபாஷ் யாதவ் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவின் உதவியாளராக இருந்து வந்துள்ளார். இதற்கிடையே, பிராட்சன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் சுபாஷ் யாதவ், பீஹாரில் சட்டம் விரோத சுரங்கம் நடத்தி வருவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள சுபாஷ் யாதவின் வீடு மற்றும் தொடர்புடைய பல இடங்களில் 14 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து ரூ.2.3 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவின் உதவியாளரான சுபாஷ் யாதவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

