ADDED : நவ 30, 2024 02:40 AM
சபரிமலை:ஒரே குழுவாக 40 பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்லும் ஊருக்கு உடனடியாக பம்பையிலிருந்து பஸ் இயக்கப்படும் என்று கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சபரிமலை மண்டல மகர விளக்கு காலத்தில் பக்தர்களுக்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் பம்பை டெப்போவில் பல்வேறு வசதிகளை செய்துள்ளது. நிலக்கல் செயின் சர்வீஸ் மற்றும் தொலைதூர சர்வீசுக்காக 200 பஸ்கள் வந்துள்ளன. இவற்றுடன் கேரளாவின் பல்வேறு டிப்போக்களில் இருந்து பம்பைக்கு தினசரி ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன.
பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு திரிவேணி சந்திப்பிலிருந்து செயின் சர்வீஸ் பஸ்கள் புறப்படுகிறது. தொலைதூர பஸ்கள் பம்பை பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு செல்கிறது. செங்கன்னூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், எருமேலி , பத்தனம்திட்டா, குமுளி,கம்பம், தேனி, பழநி, தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு தற்போது தொலைதூர சர்வீஸ் உள்ளது.
குறைந்தபட்சம் 40 பக்தர்கள் இணைந்து வந்து கேட்டால் அவர்கள் செல்லும் ஊருக்கு உடனடியாக பஸ் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட்க்கு அழைத்துச் செல்ல இலவசமாக மூன்று பஸ்கள் இயக்கப்படுகின்றன.

