நவோதயா பள்ளிகள் அமைக்காததால் தமிழகத்துக்கு பாதிப்பு! பார்லிமென்ட் மதிப்பீட்டு குழு அறிக்கையில் தகவல்
நவோதயா பள்ளிகள் அமைக்காததால் தமிழகத்துக்கு பாதிப்பு! பார்லிமென்ட் மதிப்பீட்டு குழு அறிக்கையில் தகவல்
UPDATED : ஆக 15, 2026 03:44 PM
ADDED : ஆக 15, 2026 03:40 PM
- நமது சிறப்பு நிருபர் -
'சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாதது, ஆசிரியர் காலி பணியிடங்கள் மற்றும் ஜவஹர் நவோதயா பள்ளிகள் அமைக்காதது ஆகியவை, தமிழகத்தில் கல்வித் துறையை பெரிதும் பாதித்துள்ளதாக, பார்லி., மதிப்பீட்டு குழு கவலை தெரிவித்துள்ளது.
பா.ஜ., லோக்சபா எம்.பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையிலான பார்லி., மதிப்பீட்டு குழு, 'நாட்டில் மலிவான மற்றும் தரமான கல்வி வழங்குவதற்கான பட்ஜெட் மற்றும் கொள்கை அம்சங்கள், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஆய்வு உள்ளிட்டவை' என்ற தலைப்பில், பார்லி.,யில் சமர்ப்பித்த அறிக்கையின் விபரம்:
'பிரபந்த்' என்ற இணையதளத்தில், 2024 - 25ம் நிதியாண்டுக்கான நிதி பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. சமக்ர சிக் ஷா திட்டத்தில், புரிதலுடன் வாசித்தல் மற்றும் எண்ணறிவுத் திறனுக்கான தேசிய முயற்சி என்ற திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட, 3,029 கோடி ரூபாயில், 1,847 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது.
அசாம், டில்லி, கோவா, குஜராத், கேரளா, சிக்கிம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நிதி பயன்பாடு மிகக் குறைவாக உள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம், 152 கோடி ரூபாயில், மாநிலம் வெறும், 10 கோடி ரூபாயை மட்டுமே பயன்படுத்தி உள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் அமைப்பு ரீதியான தடைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. 2025 நவ., 1 நிலவரப்படி, நாடு முழுதும் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள், 50,414ல், 8,457 காலியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில், 726 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. அடுத்தபடியாக, ம.பி., - 603; ஒடிஷா - 587 காலி இடங்கள் உள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதை தமிழகம் இன்னும் ஏற்கவில்லை. இதனால், அனுமதிக்கப்பட்ட பல நவோதயா பள்ளிகள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக, தகுதியான மாணவர்கள் தரமான கல்வியை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர். நிலம் கிடைக்காதது, தற்காலிக இடவசதி மற்றும் பிற நிர்வாக மற்றும் உட்கட்டமைப்பு சிக்கல்கள் தான் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம்.
நவோதயா பள்ளிகளை உரிய காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நவோதயா திட்டத்தின் கீழ் கற்பிக்கப்படும் கல்வி சமத்துவம், சிறப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகிய நோக்கங்களை அடைய உதவும். மேலும், தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலை கல்வி நிலை உயரும் போது மாணவர் சேர்க்கையில், 73 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. கல்வி எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை முழு அளவிலான மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்துவது அவசியம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
