தாக்குதலுக்கு பயந்து பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயன்ற இம்ரான்கான்!
தாக்குதலுக்கு பயந்து பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயன்ற இம்ரான்கான்!
ADDED : ஜன 09, 2024 12:40 PM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019 ல் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பிரதமர் மோடியுடன், அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஆக இருந்த இம்ரான் கான் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், அதற்கு இந்தியா செவி சாய்க்கவில்லை என தூதரக அதிகாரி அஜய் பிஸாரியா கூறியுள்ளார்.
அஜய் பிஸாரியா, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஆக பணியாற்றியவர். இவர், ‛ anger management: the troubled diplomatic relationship' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த புத்தகத்தில் கூறியுள்ளதாவது: புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை நோக்கி 9 ஏவுகணைகளை ஏவத் தயார் நிலையில் இந்தியா வைத்து இருந்தது குறித்து அந்நாட்டிற்கு நம்பகமான தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்தியா பொறுமை காக்க வேண்டும். இது போர் நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிடும் என அந்நாடு கூறியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மீறியதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. பாகிஸ்தான் ராணுவமும் சில விளக்கங்களை அளித்தது.
இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என பயந்து போன பாகிஸ்தான் பிரதமர் ஆக இருந்த இம்ரான் கான், இதனை நிறுத்துவதற்கும், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் இந்திய பிரதமர் மோடியை நள்ளிரவில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றார்.
அன்றைய நாளில், நான் டில்லியில் இருந்த போது, பாகிஸ்தான் தூதர் ஆக இருந்த சோஹைல் முகமதுவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, பிரதமர் மோடியுடன், இம்ரான் கான் பேச விரும்புவதாக தெரிவித்தார். டில்லியில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, மோடியுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடையாது. ஏதாவது செய்தி இருந்தால், என்னிடம் தெரிவிக்கலாம் என சோஹைல் முகமதுவிடம் கூறினேன். அதற்கு பிறகு, இம்ரான் கானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அந்த புத்தகத்தில் பிஸாரியா கூறியுள்ளார்.