கேரளாவில் கம்யூ., உறவு இல்லை 16 தொகுதிகளில் காங்., போட்டி
கேரளாவில் கம்யூ., உறவு இல்லை 16 தொகுதிகளில் காங்., போட்டி
ADDED : பிப் 28, 2024 11:50 PM
திருவனந்தபுரம்: வரும் லோக்சபா தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், 16ல், காங்., போட்டியிடுகிறது. மீதமுள்ள நான்கு இடங்களில், அதன் கூட்டணி கட்சிகள் களம் காணுகின்றன.
கேரளாவில், 'இண்டியா' கூட்டணி கட்சிகளான, காங்., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், ஏற்கனவே, யு.டி.எப்., எனப்படும், ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
பேச்சு
இங்கு மொத்தமுள்ள, 20 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து, இந்த கட்சிகள் கடந்த சில நாட்களாக பேச்சு நடத்தின.
கடந்த முறை போலவே, இரு தொகுதி கள் மட்டுமே ஒதுக்கப்படும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிடம், காங்., கறாராக தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூன்று தொகுதிகளை கேட்டது. ராஜ்யசபா சீட் தருவதாக காங்., உறுதி அளித்ததை அடுத்து, அக்கட்சி இரு தொகுதிகளில் போட்டியிட ஒப்புக் கொண்டது.
இந்நிலையில், கேரளாவில் மொத்தமுள்ள, 20 லோக்சபா தொகுதிகளில், 16ல், காங்., போட்டியிட உள்ளதாக, அக்கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன் நேற்று அறிவித்தார்.
இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
தலா ஒரு தொகுதி
மீதமுள்ள நான்கு தொகுதிகளில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரு தொகுதிகளும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் கேரள காங்., ஜே கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, மலப்புரம், பொன்னானியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்; கொல்லத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி; கோட்டயத்தில், கேரள காங்கிரஸ் ஜே கட்சி போட்டியிடுகின்றன.

