கிரிப்டோகரன்சி பெயரில் மோசடி: ரூ.1,646 கோடி பறிமுதல்
கிரிப்டோகரன்சி பெயரில் மோசடி: ரூ.1,646 கோடி பறிமுதல்
ADDED : பிப் 16, 2025 01:42 AM

புதுடில்லி: கிரிப்டோகரன்சி பெயரில் உலகம் முழுதும் நடத்தப்பட்ட மோசடி விவகாரத்தில், 1,646 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உலகம் முழுதும் கிரிப்டோகரன்சி தொடர்பான வர்த்தகம் பெருகி வரும் சூழலில், அதே பெயரில் மோசடி சம்பவங்களும் அரங்கேறத் துவங்கியுள்ளன.
குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்தவர் சதீஷ் கும்பானி; 'பிட் கனெக்ட்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை 2016ல் துவக்கி, இதற்கான ஏஜென்ட்களை உலகம் முழுதும் நியமித்தார்.
கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்ய விளம்பரங்களை வெளியிட்டார். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்த திட்டத்திற்காக சிறப்பு சாப்ட்வேரை உருவாக்கிய சதீஷ், கிரிப்டோ சந்தையில் வர்த்தகம் செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மக்களை நம்ப வைத்தார்.
இது ஒரு மோசடி என தெரியாமல், ஏராளமானோர் கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். புதிய முதலீட்டாளர்களின் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுத்து லாபம் காட்டுவது போல் சதீஷ் நடித்தார்.
தலைமறைவு
முதலீட்டு தொகைக்கு ஏற்ப, நியமிக்கப்பட்ட ஏஜென்ட்களுக்கு கமிஷனும் வழங்கினார். வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடாக பெற்ற சதீஷ், அவற்றை கிரிப்டோ வாலெட்டுகள், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் முறையில் மாற்றி மறைத்து வைத்தார்.
இதனால், தங்கள் தொகை எங்குள்ளது என்ற விபரம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாத நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, இந்த திட்டம் குறித்த சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வழக்கு பதியப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சதீஷ் தலைமறைவானார். அவருக்கு எதிராக அமெரிக்க புலனாய்வு அமைப்பு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இவர், குஜராத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்ததை அடுத்து, இந்த வழக்கு நம் நாட்டின் அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. நவ., 2016 - ஜன., 2018 வரை நடந்த இந்த மோசடி தொடர்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக குஜராத்தின் சூரத் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், 13.50 லட்சம் ரூபாய், சொகுசு கார், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை சமீபத்தில் பறிமுதல் செய்தனர்.
அப்போது, 1,646 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சி தொகையும் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
பண பரிவர்த்தனை
இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், 'உலகம் முழுதும் விளம்பரதாரர்களின் உதவியுடன் 20,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'பணப் பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மோசடி நடந்துள்ளது. சதீஷ் கும்பானிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 1,646 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.
'கிரிப்டோகரன்சி தொடர்பான வழக்கில் இது மிகப்பெரிய தொகையாகும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.